மாஸ்கோவில் ராஜ்நாத், சீன, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடன் பேசும் ஜெய்சங்கர்.. செம்ம திருப்பம்
மாஸ்கோ: லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் நிலைமை குறித்து இராணுவ அதிகாரிகளை சந்தித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் அடுத்த நாள் (திங்கள்கிழமை) இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை அடைந்தார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ரஷ்யாவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு எதிராக சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 24 ம் தேதி மாஸ்கோவில் இராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கவே மூன்று நாள் பயணமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோ சென்றுள்ளார்.
இந்த விழாவில் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கே கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ராணுவ அணிவகுப்பில் இந்திய மற்றும் சீன ராணுவ படைகள் உள்பட பல்வேறு நாட்டு படை வீரர்கள் பங்கேற்கின்றன.
டெல்லியில் இருந்து புறப்பட்டபோது, ராஜ்நாத் சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது: "மூன்று நாள் பயணத்தில் மாஸ்கோவிற்கு புறப்படுகிறேன். இந்த பயணம் ரஷ்யா விஜயம் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு மற்றும் யுக்தி சார்ந்த கூட்டாட்சியை மேலும் ஆழமாக்குவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. நான் மாஸ்கோவில் நடைபெறும் 75 வது வெற்றி நாள் அணிவகுப்பிலும் கலந்துகொள்வேன். " என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி
இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (ஆர்.ஐ.சி) வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திற்குப் பிறகு ஜெய்சங்கர் சீனாவுடன் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும், ஜூன் 15 அன்று இரவில் சீன படையினருடன் வன்முறை மோதல்களில் 16 பீகார் ரெஜ்மெண்ட் அதிகாரிகள் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.