பண மதிப்பிழப்பு, பற்றி பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் கருத்து என்ன தெரியுமா?
இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர், டிமானிடைசேஷன் குறித்து மோசமாக கருத்து தெரிவித்துள்ளார் .
நியூயார்க்: இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பரில் டிமானிடைசேஷன் எனப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை திடீர் என்று செய்யப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500,1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன.
இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர், இந்த டிமானிடைசேஷன் குறித்து மோசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துவிட்டு 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது மிகவும் தவறான நடவடிக்கை என்பது போல் இவர் பேசியுள்ளார்.
டிமானிடைசேஷன்
இந்தியாவில் கடந்து ஆண்டு நவம்பரில் திடிரென்று 500, 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. டிமானிடைசேஷன் என்று அழைக்கப்படும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலரது பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. நிறைய தொழில் நிறுவனங்கள் கடன்பட்டு திவாலாகும் நிலைக்குச் சென்றன. பெரிய வர்த்தக நிறுவனங்கள் தொடங்கி, சிறு தொழில் நிறுவனங்கள் வரை இந்த எதிர்பாராத விஷயத்தால் ஸ்தம்பித்து நின்றன.
ரிச்சர்ட் தாலருக்கு நோபல் பரிசு
இந்த நிலையில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நிறைய பொருளாதார ஆய்வாளர்கள் மோசமான கருத்துக்களை கூற ஆரம்பித்தனர். இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணரான, முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இவருக்குத்தான் இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தாலருக்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டுள்ளது.
டிமானிடைசேஷன் ரிச்சர்ட் தாலர் கருத்து
சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இவர் சென்ற வருடம் இந்தியாவில் டிமானிடைசேஷன் செய்யப்பட போது அது குறித்து கருத்து தெரிவித்தார். அதன்படி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டிமானிடைசேஷன் மிகவும் சிறந்த நடவடிக்கை ஆகும். உயர்ந்த மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இல்லாதது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் என்று கூறியிருந்தார்.
மனம் மாறிய ரிச்சர்ட்
இந்த நிலையில் ரிச்சர்ட்டின் இந்த கருத்துக்கு பதிலாக ஒருவர் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த பதிலை பார்த்து ரிச்சர்ட் தாலர் உடனே அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதற்கு முன்பு டிமனைடைசேஷன் குறித்து அவர் கூறிய கருத்தை திரும்பப் பெறும் வரும் வகையில் " ஐயோ '' என்பது போல மோசமான கருத்து ஒன்றை தெரிவித்தார். இதன் மூலம் அவர் 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராக இருக்கிறார் என்பது தெரிந்தது.
இரண்டு செய்திகள்
இந்த இரண்டு கருத்துக்களையும் இந்திய மக்கள் வெவ்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பரப்பத் தொடங்கினர். பாஜக கடசிக்கு சாதகமாக பேசும் நபர்கள், ரிச்ச்ர்ட் டிமானிடைசேஷன் குறித்து முதலில் கூறிய கருத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு இரண்டாவது கூறிய கருத்தை பற்றி பேசாமல் இருந்தனர். மாறாக பலர் இவர் இரண்டாவதாக கூறிய கருத்தை வைத்து இந்தியா முழுக்க அந்த தனி ஒரு டிவிட்டை ட்ரெண்டாக்கினர்.