சவூதியில் படிக்கும் தமிழ் குழந்தைகளுக்காக ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கட்டுரைப் போட்டி
ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்கம் சவூதியில் பயிலும் தமிழ்ச் சமூக மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகிறது.
இது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய ஒருங்கிணைப்பாளர் ஷேக் முஹம்மது ஷாஜஹான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரியாத் - சவூதி அரேபியா தமிழ்ச்சங்கத்தின் நிறுவன உறுப்பினரும், நிர்வாகக் குழுவின் செயற்குழு உறுப்பினரும், உயர்மட்டக்குழுவில் பல்வேறு பொறுப்பும் வகித்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் மறைந்து போன திருவாளர் அப்பாஸ் ஷாஜஹான் அவர்களின் பெயரால் ரியாத் தமிழ்ச்சங்கம் சவூதி அரேபியாவில் பயிலும் தமிழ்ச் சமூக மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி நடாத்த முடிவு செய்திருக்கிறது.
தமிழ் அறிந்த பள்ளி மாணவர்களிடையே எழுத்துத் திறனையும், சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து நடத்துகிற கட்டுரைப் போட்டி விவரம்:
கீழ்க் காண்கிற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் (200 வரிகளுக்குள்) தமிழில் கட்டுரை எழுதி நவம்பர் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
தலைப்புகள்:
மனிதநேயம் : மனம் தேடும் மணம்
வருங்காலம் வளமே தரட்டும்
வெற்றி காத்திருக்கிறது!
புவிவெப்பமயம்: புலப்படும் தீர்வுகள்
விதிமுறைகள்:
1). கட்டுரையாளர் பள்ளி மாணவர் என்பதை உறுதிப்படுத்தும் ஏதேனும் ஒரு நடப்புச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும்.
2). இயன்ற அளவு பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுத வேண்டும்.
3). தானே சொந்தமாக எழுதியது என்றும், வேறெதையும் தழுவி எழுதப்பட்டதன்று என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும். (சார்பில் எழுதப்படும் (Proxy) ஆக்கங்களைத் தவிர்க்க, எழுதியவற்றிலிருந்து குறுக்குக் கேள்விகள் எழுப்பி உறுதி செய்யப்படும்)
4). குறிப்பு உதவி (Reference) நூல்களை, ஏதேனும் இருந்தால், குறிப்பிடுவது நலம்
5). 7-11-2013 அன்றுக்குள் கட்டுரையை அனுப்பி வைக்க வேண்டும்.
6). மின்னஞ்சல் வடிவிலோ, அல்லது ரியாத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மூலமோ நவம்பர் 7ம் தேதிக்குள் கட்டுரைப் போட்டிக் குழுவினருக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்கலாம்.
7). இப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது.
இந்த போட்டி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் இப்போட்டியின் நெறியாளர் பஃக்ருத்தீன் இப்னுஹம்துன் (050 789 1953) மற்றும் துணை நெறியாளர் முஹமது ஷெரீஃப் (050 9195 698) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.