18 ஆண்டுகள் மண்டேலா வாழ்ந்த ரூபன் தீவுச் சிறை சுற்றுலாத் தளமானது
ஜோகனஸ்பர்க்: மறைந்த தென்னாப்பிரிக்க அதிபரான நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் வாழ்ந்த ரூபன் தீவுச் சிறை சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா சமீபத்தில் தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார். கறுப்பர் இன மக்களின் விடுதலைக்காக போராடிய மண்டேலா உலக மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம்பெற்றவர்.
அவர் தனது 18 ஆண்டு கால சிறைவாசத்தை அனுபவித்த ரூபன் சிறையை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கிறார்களாம்.
பிறப்பு....
கறுப்பர் இன மக்களுக்கு, வெள்ளைத் நிறத்தினர் பூட்டிய ஆதிக்க அடிமை விலங்குகளை உடைத்தெரிந்த மாமனிதரான நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில், பழங்குடியினரின் அரச குடும்பத்தில், சோசா இனக்குழுவில் 1918 ஜூலை 18 இல் பிறந்தார்.
தேசியத்தின் ஈட்டி முனை....
சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். கறுப்பர்களை விடுவிக்க 1912 இல் நிறுவப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்து, இளைஞர் மன்றத்தில் இணைந்து, படிப்படியாக இயக்கத்தில் வளர்ந்து அதன் தலைவரானார். 1952 இல் அடக்குமுறைக்கு ஆளாகி, சிறைவாசம் ஏற்றவர், விடுதலைக் கிளர்ச்சியை முன்னெடுத்ததால், மீண்டும் 1956 டிசம்பர் 5 இல் ராஜதுரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். விடுதலையான பின், கறுப்பர்களை மீட்க ஆயுதப் போராட்டமே வழியாகும் என அறிவித்து, ‘தேசியத்தின் ஈட்டிமுனை' என்ற அமைப்புக்குத் தலைவரானார்.
கைது...
மீண்டும், வெள்ளை நிறத்தினர் அரசால், 1962 ஆகஸ்டு 5 இல் கைது செய்யப்பட்டு, முதலில் பிரிட்டோனியா தீவுச் சிறையிலும், பின்னர் ரோபன் தீவுச் சிறையிலும் அடைக்கப்பட்டார். 1963 ஜூலை 11 இல், தென்னாப்பிரிக்க அரசின் காவல்துறை புரட்சிப் படையினர் 7 பேரை கைது செய்ததோடு, அரசைக் கவிழ்க்கும் சதிக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்ட வழக்கில், நெல்சன் மண்டேலாவும் கூண்டில் நிறுத்தப்பட்டார். மரண தண்டனையை எதிர்நோக்கி நின்றார்.
ஆயுள் தண்டனை....
ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ரூபன் தீவுச் சிறையில், கொடூரமான துன்பங்களை அனுபவித்தார். பாறைகளை உடைத்து, சுண்ணாம்புக் கல் குவாரியில் கொதிக்கும் நெருப்பு வெயிலில் கல் உடைக்கும் வேலையில் வியர்வை சிந்தி உழைத்தார்.
வேண்டாம் விடுதலை....
1973 இல் டிரான்ஸ்காய் மாநிலத்தில் மட்டும் மண்டேலா வசிப்பதாக இருந்தால் விடுதலை செய்ய வெள்ளை அரசு முன்வந்தது. மண்டேலா அதை நிராகரித்தார். "தமது கறுப்பர் இன மக்கள் முழு விடுதலை கிடைக்கும் வரை எனக்கு விடுதலை தேவை இல்லை" என அறிவித்தார்.
விடுதலை....
ஐ.நா.வின் பொதுச்சபை அவரை விடுவிக்கக் கோரியது. அவரை விடுவிக்கவும், நிறவேற்றுமைக் கொடுமையை ஒழிக்கவும் தீர்மானம் நிறைவேற்றியது. வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறைக்கொட்டடித் துன்பத்தை ஏற்றபின், 1990 பிப்ரவரி 11 இல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் அதிபரானார்.
நோபல்பரிசு...
மீண்டும் அதிபராகும் வாய்ப்பு இருந்தும், இரண்டாம் முறை போட்டியிடவில்லை. 1993 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.
மரணம்....
நுறையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து 10 நாள் அரசு மரியாதைக்குப் பிறகு கடந்த 15ம் தேதி அன்னாரின் விருப்பப் படி அவரது சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.
சுற்றுலாத் தளம்....
இந்நிலையில், மண்டேலா 18 ஆண்டுகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த ரூபன் தீவுச் சிறை தற்போது சுற்றுலா தலமாக மாறி தென் ஆப்பிரிக்க அரசுக்கு வருமானத்தை குவித்து வருகிறது.
ரூபன் தீவு....
தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் வெளி நாட்டினர் முதலில் கேப் டவுன் போன்ற இடங்களுக்கு செல்வதை விட, அதிக ஆர்வமாக மிகச்சிறிய நகரமான ரூபன் தீவுக்குதான் படையெடுக்கின்றனராம்.
நினைவுச் சின்னங்கள்....
அங்குள்ள சிறைக்கு சென்று மண்டேலா அடைக்கப்பட்டிருந்த மிகச்சிறிய அறையை மரியாதை கலந்த ஆர்வத்துடன் பார்க்கின்றனர். அந்த அறையில் மண்டேலா படுக்கையாக பயன்படுத்திய ஒரு போர்வை, மேஜை, தண்ணீர் குடித்த டம்ளர், குப்பை கூடை போன்றவை நினைவு சின்னங்களாக உள்ளன.
நீங்காத நினைவுகள்....
மண்டேலா விடுதலை ஆகி 22 ஆண்டுகளாகியும் இன்னும் அவை நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்ப்பிடத்தக்கது.