ஜெர்மனி ஃபோக்ஸ்வேகன் ஃபேக்டரியில் பணியாளரை நசுக்கிக் கொன்ற ரோபோ
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர் ஒருவரை ரோபோ கொலை செய்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பிரான்க்பர்ட் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவ்னடாலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகன தயாரிப்பு ஃபேக்டரி உள்ளது. அந்த ஃபேக்டரியில் 22 வயது நபர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
அவர் ரோபோவை உருவாக்கும் குழுவில் இருந்தார். அவரை ரோபோ ஒன்று பிடித்து மெட்டல் பிளேட்டுடன் வைத்து அவரை நசுக்கி கொலை செய்தது. இது குறித்து ஃபோக்ஸ்வேகன் செய்தித் தொடர்பாளர் ஹெய்கோ ஹில்விக் கூறுகையில்,
ரோபோவில் எந்த பிரச்சனையும் இல்லை. இது மனித தவறால் நடந்த சம்பவம் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரோபோ ஃபேக்டரியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வேலை செய்யும். சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த மற்றொரு ஒப்பந்த பணியாளரை ரோபோ ஒன்றும் செய்யவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
கொலை குறித்து வழக்குப்பதிவு செய்வதா அப்படி செய்தால் யார் மீது வழக்குப்பதிவது என்று போலீசார் யோசித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஜெர்மனி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.