ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டகாசம்.. இந்திய தூதரக அதிகாரி வீட்டில் ராக்கெட் வீச்சு!
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வீட்டில் தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு மூலம் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கே பதற்றம் நிலவுகிறது.
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வீட்டில் ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனாலும் பதற்றம் கூடியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை. தூதரகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த ராக்கெட் விழுந்துள்ளது. இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரியின் வீட்டுக்கு பாதுகாப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் உள்ள வாலிபால் மைதானத்தில், இன்று காலை 11.15 மணிக்கு ராக்கெட் வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் யாருக்கும் ஆபத்து இல்லை.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தலிபான் பயங்கரவாத இயக்கம் மீண்டும் காலூன்ற முயற்சி செய்கிறது.
ஆப்கானிஸ்தானில் மற்றொரு பக்கம், ஒட்டுமொத்த உலகத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிற ஐ.எஸ். அமைப்பினரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இரு அமைப்பினரும் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு, அந்த நாட்டை சின்னாபின்னமாக்கி வருகின்றனர்.
காபூல் நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில், ஜெர்மனி தூதரகத்தின் நுழைவாயிலில் கடந்த மே மாதம் 31-ம் தேதி லாரி ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 90 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.