வங்கதேசத்தை தாக்கிய "மோரா" சூறாவளிக்கு 7 பேர் பலி.. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பரிதவிப்பு
டாக்கா: வங்கதேசத்தை தாக்கிய மோரா சூறாவளியினால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூறாவளியில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் மியான்மரில் இருந்து அகதிகளாக வெளியேறி வங்கதேசம் எல்லைப்பகுதியில் 12,000 த்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் முகாம்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் அவர்கள் வெட்டவெளியில் வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ரோஹிங்கியா முகாம் தலைவரான ஹாம்சுல் அலம் என்பவர் ராய்ட்டர் நியூஸ் ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளதன் படி, பலுகாலி (Balukhali) மற்றும் குடுபலோங் (Kutupalong) முகாம்களில் உள்ள பத்தாயிரம் கூரை வீடுகளும் கடுமையான சேதமடைந்துள்ளன.
வங்கதேச அரசின் குறிப்புகள் படி, அங்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம்களான ரோஹிங்கியாக்கள் மியான்மரில் புத்த பெரும்பான்மையினரால் தொடர்ந்து பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருவதில் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
'முகாம்களில் உணவு, வசிப்பிடம், மருத்துவ வசதிகள், சுகாதார பிரச்னைகள்' ஏற்பட்டுள்ளதாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச இடப்பெயர்வு அமைப்பின் பொறுப்பாளர் சஞ்சுத்தா சகாயனி தெரிவித்துள்ளார்.
காக்ஸ் பஜார் என்ற மாவட்டத்தில் உள்ள செயிண்ட் மார்டின், டெக்நப் பகுதிகளிலிருந்து சுமார் இரண்டு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி நகர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷ் முழுதும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மோரா சூறாவளி காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணப் பணிகள் நடந்து வந்தாலும் ரோஹிங்கியா அகதிகளுக்கு நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை அல்லது அவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.