சமூக இடைவெளிக்காக ‘செருப்பை’ கையில் எடுத்த வியாபாரி.. மாத்தி யோசித்தால் எப்பவும் சக்ஸஸ் தான்!
சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ரோமானிய செருப்பு வியாபாரி பிரத்யேக காலணிகளை உருவாக்கியுள்ளார்.
பசாரெஸ்ட்: கொரோனாவை தடுக்கும் பொருட்டு பொதுமக்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ரோமானிய செருப்பு வியாபாரி ஒருவர் பிரத்யேக காலணிகளை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க முடிவும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே பொதுமக்கள் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் கொரோனாவின் தீவிரம் புரியாத பலர், இந்த விதிகளை கடைப்பிடிக்காமல் ஜாலியாக ஊர்சுற்றித் திரிகின்றனர். இதனால் நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பதற வைக்கும் சென்னை.. பரிசோதிக்கும் 5ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. உஷார் மக்களே!
பிரத்யேக காலனிகள்
இந்த சூழலில் மக்களிடையே சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளார் ரோமானிய செருப்பு வியாபாரி ஒருவர். அவரது இந்த அக்கறையான முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரோமானிய செருப்பு வியாபாரி
லுப் எனும் அந்த செருப்பு வியாபாரி, ரோமானியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கிளஜ் நபோகா எனும் நகரில் காலனி கடை நடத்தி வருகிறார். அந்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு தான் லுப் தனது கடையை திறந்தார்.
முன்பக்கம் நீண்ட காலனிகள்
மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய, அதற்காகவே பிரத்யேக ஷூக்களை லுப் வடிவமைத்துள்ளார். ஷூவின் முன்பக்க முனையை மிக நீளமாக வடிவமைத்துள்ள லுப், இதன் மூலம் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த முடியும் என நம்புகிறார்.
மக்களின் நெருக்கம்
இதுகுறித்து லுப் கூறுகையில், "இரு தினங்களுக்கு முன்பு நான் கடைத்தெருவுக்கு சென்றேன். அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இல்லை. இருப்பினும் மக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மிக நெருக்கமாக நின்றனர். எனவே தான் இந்த ஷூவை வடிவமைத்தேன்.
ஒன்றரை மீட்டர் இடைவெளி
இரண்டு நபர்கள் இந்த ஷூவை காலில் மாட்டிக்கொண்டு எதிரெதிரே நின்றால், அவர்களுக்கு இடையில் சுமார் ஒன்றரை மீட்டர் இடைவெளி ஏற்படும். இதன் மூலம் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த முடியும்", என்கிறார் செருப்பு வியாபாரி லுப்.
நல்ல வரவேற்பு
லுப்பின் இந்த புதிய முயற்சிக்கு ஒரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐந்து பேர் அவரிடம் சமூக இடைவெளி ஷூக்களை செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளனராம். இதனால் அவரது வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
குடை ஐடியா
கேரளா உள்பட இந்தியாவில் சில மாநிலங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க குடை பிடிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், இந்த வித்தியாசமான ஷூக்களையும் மக்கள் அணிய ஊக்குவித்தால் கட்டாயம் மக்களிடையே சமூக இடைவெளி உருவாகி விடும் என எதிர்பார்க்கலாம்.