ருமேனியா நைட் கிளப்பில் பயங்கர தீ 26 பேர் பலி; 150 பேர் படுகாயம்
புக்கரெஸ்ட்: ருமேனியாவில் நேற்று இரவு நிகழ்ந்த தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ருமேனியா நாட்டில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று இரவு ராக் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே நடைபெற்ற இரவு விருந்தில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கையின் போது திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 26 பேர் பலியாயினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டு துணை உள்துறை அமைச்சர் ரீட் அரபாத் கூறுகையில், திடீர் என தீ பற்றிக் கொண்டதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதனால் விடுதிக்குள் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாட்டினர் எனவும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் துணை பிரதமர் கேப்ரியல் கூறுகையில், ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தீவிபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இரத்த தானம், அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.