ரோம் பல்கலைக்கழக மாணவியை உயிரோடு எரித்துக் கொன்ற முன்னாள் காதலன்
ரோம்: ரோம் பல்கலைக்கழக மாணவி தனது முன்னாள் காதலரால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரோம் பல்கலைக்கழத்தில் படித்து வந்தவர் சாரா டி பீட்ரான்டோனியோ(22). அவரது முன்னாள் காதலர் வின்சென்சோ படுவானோ(27). ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய வின்சென்சோ இரவு 3 மணிக்கு பணி முடிந்த பிறகு நேராக சாராவின் தற்போதைய காதலர் வீட்டிற்கு சென்று அங்கு வெளியே காத்திருந்தார்.
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த சாரா தனது காரில் ஏறி கிளம்பினார். அவரது காரை பின் தொடர்ந்த வின்சென்சோ தனது காரால் ஓவர்டேக் செய்து நிறுத்தினார். இதையடுத்து சாராவின் காருக்குள் சென்ற வின்சென்சோ அவருடன் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டார். பின்னர் தான் வைத்திருந்த மதுவை காருக்குள் ஊற்றி தீ வைத்தார்.
இதை பார்த்த சாரா தப்பியோட அவரை பிடித்து வந்து அவர் மீதும் மதுவை ஊற்றி அவரது முகத்தை சிகரெட் லைட்டரால் பற்ற வைத்தார். சாராவின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து ரசித்தார் வின்சென்சோ. சாரா உடல் கருகி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வின்சென்சோவை பிடித்து விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். பின்னர் 8 மணிநேரம் விசாரித்த பிறகே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
சாரா தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலித்ததற்காக வின்சென்சோ இந்த கொடுமையை செய்துள்ளார்.