கடலில் வைத்தே கைமாற்ற பலே திட்டம்.. ரூ.600 கோடி ஹெராயின் பறிமுதல்.. சுற்றி வளைக்கப்பட்ட பாக்., படகு
காந்திநகர்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடிப் படகில் இருந்து, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு கடல் எல்லை வழியாக அவப்போது கோடிகக்ணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும். இதனை தடுக்க கடலோர எல்லை பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இருப்பினும் அடிக்கடி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் குஜராத் மாநிலம் அருகே, பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றில் பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சில நாட்களுக்கு முன் கடலோர காவல் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விரைந்து நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், நவீன படகுகளை வைத்தும் ஹெலிகாப்டர் உதவியுடனும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நடுக்கடலில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகை அதிரடியாக சுற்றிவளைத்தனர். பின்னர் குறிப்பிட்ட படகில் நடத்தப்பட்ட சோதனையில், ஹெராயின் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டு மீன்பிடி படகிலிருந்து சுமார் 200 கிலோ அளவிலான 194 ஹெராயின் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மூத்த கடலோர காவல் அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் படகில் இருந்த போதை பொருட்களை கரைக்கு கொண்டு வராமல் கடலில் வைத்தே கைமாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து உஷாரான நாங்கள் அவர்களை சுற்றி வளைக்க நவீன படகுகளை பயன்படுத்தினோம் என்றார். கடலுக்குள் நுழைந்து தேடும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் நவீன படகுகளின் உதவியால், பாகிஸ்தான் படகை கண்டறிந்துவிட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். இந்திய எல்லைக்குள் 8 நாட்டிக்கல் மைல் தூரம் பாகிஸ்தான் படகு உள்ளே வந்திருந்தது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் நோக்குடன் எக்ஸிட் போல் வெளியீடு: மொய்லி குற்றச்சாட்டு
பின்னர் அதிலிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, படகுடன் அருகிலிருந்த கடரோர காவல்படை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படகிலிருந்த பாகிஸ்தானை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. யாருக்காக இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் 100 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் படகு ஒன்றை கடலோரக் காவல்படை சுற்றிவளைத்து சிறைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.