ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. பிரிட்டன் நிராகரிப்பு.. ஜெர்மனி எதிர்ப்பு.. நிதானம் காக்கும் இந்தியா!
மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தகையோடு, அதற்கு Sputnik V என்று பெயரையும் சூட்டி விட்டது ரஷ்யா.
Recommended Video
தனது மகளுக்கு அந்த தடுப்பூசியை போட்டு உள்ளதாக அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மூன்றாவது கட்ட மனித பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பாகவே ரஷ்யா இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டது பற்றி உலக நாடுகள் என்ன மாதிரி கருத்துக்களை வைத்துள்ளன என்று பார்க்கலாம்.
குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த விஷயத்தை எந்த மாதிரி அணுகுகின்றன? ரஷ்யாவின் தடுப்பூசியைப் பயன்படுத்த அவை சம்மதிக்குமா என்பதற்கு இவர்கள் கருத்துக்கள் அவசியமாகும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெளியாகியுள்ள கருத்துக்களை பார்ப்போம் வாருங்கள்.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. புயலை கிளப்பிய ஜெர்மனி.. மக்களின் உயிர்தான் முக்கியம்!
இஸ்ரேல்
இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் அளித்துள்ள பேட்டியில், ரஷ்ய, கொரானா வைரஸ் தடுப்பூசி பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. சரியான தயாரிப்புதானா என்பதை உறுதி செய்துகொண்டு, அதன்பிறகு ரஷ்யாவிடம் கொள்முதல் செய்வது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரேசில்
பிரேசில் நாட்டின் பரானா மாகாண ஆளுநர் ரதினோ ஜூனியர் கூறுகையில், பிரேசிலுக்கான ரஷ்ய நாட்டு தூதரை சந்தித்து இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்வது பற்றிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். ஆனால் பிரேசில் நாட்டின் மருத்துவ ஆய்வு அமைப்பு இந்த மருந்துக்கு ஒப்புதல் தருமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
கஜகஸ்தான்
கஜகஸ்தான் நாடு தனது அதிகாரிகளை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு அனுப்பி, மருந்து கொள்முதல் செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த மாத இறுதியில், கஜகஸ்தான் குழு ரஷ்யா செல்ல உள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜசாரெவிக் கூறுகையில், முழு பரிசோதனை முடியும் முன்பு, முன்கூட்டியே ஒரு தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்க வேண்டுமானால், அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அனைத்து வகையான நெறிமுறைகளையும் அது பூர்த்தி செய்துள்ளதா என்பது பற்றியும் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்கு பிறகுதான் அனுமதி கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஜெர்மனி எதிர்ப்பு
ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறுகையில், தற்போது போதிய அளவுக்கு பரிசோதனை செய்யப்படவில்லை. பாதுகாப்பான ஒரு தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதுதான் ஜெர்மன் நாட்டின் திட்டமாக இருக்கிறது தவிர, ஊசி போட முதலில் தொடங்கிவிட வேண்டும் என்பது நோக்கம் கிடையாது என்று தெரிவித்தார்.
பிரிட்டன் ஏற்கவில்லை
பிரிட்டன் நாட்டின் சண்டே டெலிகிராப் நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்படி, ரஷ்யாவின் தடுப்பூசியை பிரிட்டன் பயன்படுத்தாது. ஏனெனில் மருத்துவரீதியாக முறைப்படி பரிசோதனை செய்த தடுப்பூசியை தான் பயன்படுத்த வேண்டும் என்பது பிரிட்டன் கொள்கையாம். ரஷியா, சீனா ஆகிய நாடுகளில் எதுவாக இருந்தாலும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டதை பிரிட்டன் விஞ்ஞானிகள் உறுதி செய்த பிறகுதான் அதை மக்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிபுணர்
அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல் மருத்துவர் அந்தோணி கூறுகையில், ரஷ்யா இவ்வளவு வேகமாக முழு பரிசோதனையை முடிக்காமல் தடுப்பூசியை கொண்டுவந்துள்ளது முழுக்க நம்பிக்கைக்கு இடமளிக்கவில்லை. கடைசி நபரும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதை முழுமையாக அறிவதற்கு முன்பாக தடுப்பூசி கண்டறிந்துவிட்டதாக அறிவித்து அதை வினியோகம் செய்வது சரி கிடையாது, என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கருத்து
அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனிதவள சேவை செயலாளர் அலெக்ஸ் அசார் கூறுகையில், தடுப்பூசி தொடர்பாக வெளிப்படையான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். முதலில் தடுப்பூசி கொடுப்பது முக்கியம் கிடையாது.. தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தடுப்பூசி சரியாக வேலை செய்கிறதா என்பதும் தான் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
இந்தியாவைப் பொருத்த அளவில், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப் குளோரியா அளித்துள்ள பேட்டியில், ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது உண்மை என்றால் அந்த மருந்தை நமது ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அந்த தடுப்பு மருந்தால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தடுப்பூசி வழங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், தடுப்பூசி தொடர்பான தேசிய நிபுணர் குழு, 12ம் தேதி (இன்று) நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில், ரஷ்ய தடுப்பூசி பற்றி விவாதிக்கப்படும். தடுப்பூசியை கொண்டு வருவது, சரியாக பங்கு பிரித்து அனுப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். அனைத்து மாநில அரசுகள், மருந்து உற்பத்தியாளர்களுடன், தேசிய தடுப்பூசி நிபுணர் குழு பேச்சுவார்த்தை நடத்தி, ரஷ்ய மருந்தை கொள்முதல் செய்வதா என்பது பற்றி முடிவெடுக்கும். இவ்வாவறு ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.