சிரியாவில் தொடர்கிறது ரஷ்யாவின் வேட்டை... ஐ.எஸ். இயக்க நிலைகள் மீது சராமரி விமான தாக்குதல்!!
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் உக்கிர தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 25 முறை ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதனிடையே நூற்றுக்கணக்கான ஈரானிய படையினரும் சிரியாவை சென்றடைந்துள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியுள்ளது. ஆசாத்தை எதிர்க்கும் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுவான ப்ரீ சிரியா ஆர்மி மற்றும் ஐ.எஸ்.எஸ்., அல் நூஸ்ரா ஆகிய தீவிரவாத இயக்கங்களை குறிவைத்து ரஷ்யா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த வான்வழித் தாக்குதலை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் இதைப்பற்றியெல்லாம் ரஷ்யா கவலைப்படுவதாக இல்லை. சொந்த நாடு தவிர ரஷ்யா கடற்படை தளம் அமைத்துள்ள ஒரே நாடு சிரியாதான். அதனால் எளிதாக சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை ரஷ்யாவால் மேற்கொள்ள முடிகிறது.
முதலில் கோம்ஸ் மாகாணத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியது ரஷ்யா. அது அமெரிக்கா ஆதரவு தீவிரவாத குழுவின் வசம் உள்ள நகரம்.
பின்னர் லடாகியா, இட்பிப் மாகாணங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்கா ஆதரவு குழுவான ப்ரீ சிரியா ஆர்மியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்க தயார் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர், அந்த இயக்கம் அப்படி ஒன்றும் சக்திவாய்ந்த குழு அல்ல....இருப்பினும் அக்குழுவுடன் தொடர்பு ஏற்படுத்தி பேச்சு நடத்த நாங்கள் தயார் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவைத் தொடர்ந்து ஈரானும் சிரியா போர்களத்தில் குதித்துள்ளது. அதிபர் ஆசாத்தை ஆதரிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான ஈரான் ராணுவத்தினர் சிரியா எல்லையில் குவிந்துள்ளனர். ஏற்கெனவே சிரியா ராணுவத்தில் ஆலோசகர்களாக ஈரான் நாட்டவரே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.