ரஷ்யா நடத்திய தாக்குதலில் அமெரிக்கா ஆதரவு சிரியா கிளர்ச்சியாளர்கள் 150 பேர் பலி- சி.ஐ.ஏ. அதிர்ச்சி
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா திட்டமிட்டே அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 150 பேரை படுகொலை செய்துள்ளதாக வெளியான தகவலால் சி.ஐ.ஏ. அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி என்ற கிளர்ச்சிக் குழு உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்த குழுவுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.தான் வழங்கி வருகிறது.
இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக அவரை எதிர்க்கும் ப்ரீ சிரியா ஆர்மி, ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் நூஸ்ரா முன்னணி ஆகியவற்றின் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும் அமெரிக்கா ஆதரவு ப்ரீ சிரியா ஆர்மியினரைத்தான் ரஷ்யா திட்டமிட்டு தாக்கி அழித்து வருவதாக சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சி.ஐ.ஏ. அதிகாரி ஒருவர், திட்டமிட்டே எங்கள் ஆதரவு கிளர்ச்சி குழுவினர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை ப்ரீ சிரியா ஆர்மியின் 150 பேர் ரஷ்யா தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை குறிவைத்து தாக்கவே இல்லை. இதனால் ரஷ்யாவுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் ரஷ்யாவோ, நாங்கள் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.. ஐ.எஸ். தீவிரவாதிகளையும் இலக்கு வைத்தே தாக்கி வருகிறோம்" என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
இதனிடையே சிரியாவில் பல்வேறு அபாயகரமான பேரழிவை ஏற்படுத்தக் கூடிய கனரக தளவாடங்களை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது; கொத்து குண்டுகளை சரமாரியாக வீசி வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.