சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்.. முதல் குண்டு அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் மீது!
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதாக கூறி களம் இறங்கிய ரஷ்யா, அமெரிக்கா ஆதரவு ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்கியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதலே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் ஆசாத்துக்கு ஆதரவாக, எதிராக களத்தில் இருக்கின்றன.
இதில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட டஜம்மு அல் ஆசா அல்லது ப்ரீ சிரியன் ஆர்மி என்ற ஆயுதக் குழுவை அமெரிக்கா உருவாக்கி அவர்களுக்கு ஆயுத உதவி வழங்கி வருகிறது. இந்த குழு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த இயக்கத்தின் பிடியில் சிரியாவின் ஹமா நகரம் உள்ளது.
ஈராக்கில் கடந்த ஆண்டு பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் சிரியாவின் முக்கிய நகரங்களையும் கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டைப் பிரகடனப்படுத்தியது. இந்த இயக்கம் வசம் ரக்கா, அபு கமால் ஆகிய ஈராக் எல்லையை ஒட்டிய சிரியாவின் நகரங்கள் சிக்கியுள்ளன. சிரியாவில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்நுஸ்ரா பிரண்ட் என்ற தீவிரவாத இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் கை கோர்த்திருக்கிறது.
லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கமானது அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக இருக்கிறது.
இவைகள் அல்லாமல் துருக்கி, ஈராக் எல்லையோரத்தில் உள்ள குர்து ராணுவமும் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக களத்தில் நிற்கிறது. இந்த ராணுவமானது கோபன் உள்ளிட்ட சில பகுதிகளில் வலுவாக இருக்கிறது. இந்த குர்திஸ்தான் படைக்கும் அமெரிக்காவே ஆயுத உதவி உள்ளிட்ட அனைத்து ஆதரவும் அளித்து வருகிறது.
இந்த நிலையில்தான் சிரியாவில் அதிபர் ஆசாத்தை அகற்றும் அதே நேரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒழிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் வான்வழித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன. சில பகுதிகளில் டஜம்மு அல் ஆசா அல்லது ப்ரீ சிரியன் ஆர்மி மற்றும் குர்து படையினருக்கு தரைவழித் தாக்குதல்களுக்கான ஆயுத உதவியையும் நேட்டோ படைகள் செய்து வருகின்றன.
அதே நேரத்தில் சிரியா அதிபர் ஆசாத்துக்கு மறைமுகமாக ஈரானும் ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்து வந்தன. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை நாங்களும் ஒழிக்கப் புறப்பட்டுவிட்டோம் எனக் கூறி சிரியாவுக்குள் ரஷ்யாவின் மிகப் பெரிய எஸ்யூ ரக 4 போர் விமானங்கள் களமிறங்கியுள்ளன.
அமெரிக்காவின் நேட்டோ படைகளைப் போலவே நாங்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம்; ஆகையால் உங்கள் விமானங்களை இயக்க வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு நேற்று சிரியா மண்ணில் ரஷ்யா முதல் தாக்குதலை நடத்தியது.
ஆனால் சிரியா தாக்குதல் நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசம் உள்ள ரக்கா பகுதிகள் மீது அல்ல;
அமெரிக்கா ஆதரவு தீவிரவாத குழுவான டஜம்மு அல் ஆசா அல்லது ப்ரீ சிரியன் ஆர்மி கட்டுப்பாட்டில் உள்ள ஹமா நகரம் மீது. இந்த தாக்குதலில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யாவோ ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை இலக்கு வைத்தே தாங்கள் நடத்தியதாக தெரிவித்துள்ளது. நாங்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒழிக்கத்தான் தாக்குதலை நடத்துகிறோம் என ரஷ்யா கூறிவருவதால் அமெரிக்கா எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. ஆகையால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அல்லாத குழுக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தக் கூடாது என்று மட்டும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இருப்பினும் சிரியா மண்ணில் தங்களது ஆதரவு குழுக்களின் கட்டுப்பாட்டு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்காவை ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில், உக்ரேன், கிரீமியா விவகாரத்தில் ரஷ்யாவை அமெரிக்கா அதிபர் ஒபாமா கடுமையாக சாடியிருந்தார். மேலும் சிரியா விவகாரத்தில் ரஷ்யா, ஈரானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் ரஷ்யா தன்னிச்சையாக சிரியாவில் களமிறங்கியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவிடம் தெரிவித்த ரஷ்யா
இதனிடையே சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப் போவதாக இந்தியாவிடமும் ரஷ்யா முன்கூட்டியே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் உள்ள ரஷ்யா தூதரகம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிகாரப்பூர்வமாக இத்தகவலை தெரிவித்திருந்தது.