ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா
மாஸ்கோ: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் - ஜாங்- உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு அமெரிக்காவுக்கு கசப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ள நிலையில், தனது நட்பு நாடான ரஷ்யாவுடனும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பேச்சு நடத்த விரும்பினார். இதனையடுத்து அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க திட்டமிட்டார். இந்தநிலையில், அமெரிக்காவுக்கு, குடைச்சல் தரும் ரஷ்யாவுடனும், வரலாற்றில் முதன் முறையாக இன்று கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
முன்னதாக, கிம் ஜாங் உன் தனது பிரத்யேக பச்சை நிற ரயில் மூலம், ரஷ்யாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டாக்கில் உள்ள கசான் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க வந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்- க்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வட கொரியாவின் முன்னேற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.
Russia: North Korean leader Kim Jong Un and Russian President Vladimir Putin meet in Vladivostok. pic.twitter.com/WtRtm5CRX1
— ANI (@ANI) April 25, 2019
இதனிடையே, அணு அயுதங்கள் தயாரிப்பு காரணமாக, வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற்கு ரஷ்யாவின் ஆதரவைக் கோருவதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இங்கு வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா - வடகொரியா தலைவர்களின் சந்திப்பை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதற்கு முன்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை 3 முறையும் கிம் ஜாங் உன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதிக்கு எதிராக சதி? நெருப்போடு விளையாடினால் விரல் பொசுங்கும்.. உச்சநீதிமன்றம் வார்னிங்