மனிதர்களுக்கு பரவிய புதிய வகை பறவை காய்ச்சல்... உலக சுகாதார அமைப்பை அலர்ட் செய்த ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்யா கோழிப் பண்ணையில் பணிபுரியும் சிலருக்கு H5N8 என்ற வகை பறவை காய்ச்சலை உறுதி செய்துள்ள ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், இது குறித்து உலக சுகாதார அமைப்பையும் அலர்ட் செய்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் கோழிப் பண்ணைகளும் பரவுவதால், வேறுவழியின்றி கோழிகளைப் பண்ணை உரிமையாளர்கள் அழிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாது என்பது சற்றே நிம்மதி தரும் செய்தியாக அமைந்திருந்தது. இந்நிலையில், ரஷ்யாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணிபுரியும் சிலருக்கு புதிய வகை பறவை காய்ச்சல் பரவியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
H5N8 பறவை காய்ச்சல்
தெற்கு ரஷ்யாவிலுள்ள கோழிப் பண்ணையில் பணிபுரியும் இந்த ஏழு ஊழியர்களுக்கு H5N8 என்ற வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பிற்கு அலர்ட்
பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் உடல்நிலையிலும் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தனர். இது குறித்து ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அலர்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி
பறவைகள் இடையே பரவும் மிகவும் கொடிய நோயாகப் பறவைக் காய்ச்சல் பார்க்கப்படுகிறது. இந்தப் பறவைக் காய்ச்சல் பரவும்போது எல்லாம் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழப்பதும் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இந்த புதிய வகை பறவை காய்ச்சல் தற்போது மனிதர்களுக்கும் பரவியுள்ளது ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன பாதிப்பு
இருப்பினும், மனிதர்கள் இடையே இந்த பறவை காய்ச்சல் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, அதேபோல இந்த காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பது தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை. ஏற்கனவே, கொரோனா பரவலே இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத இந்தச் சூழ்நிலையில், மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் பரவியுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.