அமெரிக்க கோழிகள்.. ஐரோப்பிய உணவுப் பொருட்களுக்கு ரஷ்யா அதிரடி தடை!
மாஸ்கோ: அமெரிக்காவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் கறிக் கோழிகள், பிற உணவுப் பொருட்கள், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உணவுப் பொருட்களை ஒரு வருடத்திற்கு ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்ய அந்த நாடு அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதனால் ரஷ்யாவை நம்பி பிழைப்பை ஓட்டி வரும் பல ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்தத் தடையால் தங்களுக்கு பெரும் பொருள் இழப்புஏற்படும் என அவை அஞ்சிக் கொண்டுள்ளன.
ஆனால் தனது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக இந்த தடையை அதிபர் விலாடிமிர் புடின் எடுத்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு புரட்சிப் படையினருக்கு ஆதரவாக இருப்பதால் கோபமடைந்துள்ள அமெரிக்கவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து வருகிறது. இதையடுத்தே புடின் இப்படி இறக்குமதி தடையை அறிவித்துள்ளார்.
இந்தத் தடை காரணமாக காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், பால், பால் வளப் பொருட்கள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தள்ளப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 21.5 சதவீத காய்கறிகளை ரஷ்யா இறக்குமதி செய்தது. அதேபோல 28 சதவீத பழங்களையும் அது இறக்குமதி செய்தது. மேலும் உணவுப் பொருட்கள், மது பானங்களுக்கும் ஐரோப்பிய நாடுகள்தான் ரஷ்யாவின் முக்கியச் சந்தையாக உள்ளது.
அதேசமயம், அமெரிக்காவிலிருந்து கோழி மட்டும்தான் அதிக அளவில் இறக்குமதி செயய்ப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து 2 லட்சத்து 76 ஆயிரத்து 100 டன் கறிக் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டன.
உக்ரைனிலிருந்து பிரிந்த கிரீமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்கவும், ஐரோப்பிய யூனியனும் ரஷ்யா மீது தடை விதித்தன. தற்போது கிழக்கு உக்ரைனும் பிரியத் துடிக்கிறது. அத ரஷ்யா ஆதரிக்கிறது. சமீபத்தில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கிழக்கு உக்ரைன் போராளிகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கான ஏவுகணையை ரஷ்யாதான் கொடுத்தது என்று குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை நெருக்கி வருகின்றன.
இந்த நிலையில்தான் இந்தத் தடையை அறிவித்துள்ளது ரஷ்யா. ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது ரஷ்யாதான் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அதேசமயம், ரஷ்ய மார்க்கெட்டை நம்பி உள்ள பல சிறிய ஐரோப்பிய நாடுகள் தற்போது பெரும் கவலை அடைந்துள்ளன. ரஷ்யாவின் முடிவால் அந்த நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. எனவே அவர்கள் ஐரோப்பிய யூனியனிடம் முறையிட்டு ரஷ்யா மீதான தடைகளை விலக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.