ஆஹா, ஓஹோன்னு பேசப்பட்ட.. ரஷ்ய கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு.. 7ல் ஒருவருக்கு பாதிப்பு
மாஸ்கோ: கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்பூட்னிக் வி என்ற தடுப்பூசியை செலுத்தப்பட்டதில், 7ல் ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்த உலகின் முதல் நாடு ரஷ்யாதான். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. தங்கள் நாட்டில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆரம்பித்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது.
இரண்டு கட்ட பரிசோதனைகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது கட்ட பரிசோதனை செய்யாமல் இதுபோல தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மறுப்பு தெரிவித்துவிட்டன.
இந்தியாவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 96,792 பேருக்கு கொரோனா பாதிப்பு- 52 லட்சத்தை தாண்டியது!
ரஷ்யா ஒப்பந்தம்
அதேநேரம் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் என்ற ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு இன்னும் அனுமதி தரவேண்டியுள்ளது. சுமார் 30 கோடி டோஸ்களை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் ரஷ்ய நிறுவனம் தனது பார்முலாவை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கி அவர்கள் மூலமாக உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
பக்க விளைவுகள்
இந்த நிலையில்தான் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ வெளியிட்டுள்ள ஒரு தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தங்களது நாட்டு தடுப்பூசியை 40,000 தன்னார்வலர்கள் செலுத்தி கொண்டதாகவும், அதில் 7ல் ஒருவருக்கு பக்க விளைவுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேசான பக்க விளைவுகள்
இதில் 14 சதவீதம் பேருக்கு சோர்வு, தசை வலி உள்ளிட்ட சிறிய அளவிலான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். ஊசி செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் சிலருக்கு உடல்நிலை வெப்பம் அதிகரித்ததாகவும் அவர் கூறுகிறார்.
வழக்கம்தானே
ரஷ்ய அமைச்சர் கூறியுள்ள கருத்துப்படி பெரிய அளவு காண பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அனைத்து வகையான தடுப்பூசிகளுக்குமே, லேசான உடல் சூடு அதிகரிப்பு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படத்தான் செய்யும். இதை எதற்காக ரஷ்ய அமைச்சர் குறிப்பிட்டு கூறினார் என்று தெரியவில்லை. ஒருவேளை இதன் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கலாம். அதற்கான சமிக்ஞை அமைச்சரால் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.