18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை
மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேலே, 60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மட்டும்தான் இப்போதைக்கு செலுத்த வேண்டும் என்று, அந்த நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாக கடந்த 11ம் தேதி அறிவித்தது, இதற்கு ஸ்பூட்னிக் 5 என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த மருந்தை பயன்படுத்த பல நாடுகளும் தயங்கி வருகின்றன. இதற்கு காரணம், 3வது மனித டிரையல்களை முடிக்காமல், 2வது டிரையலை முடித்து மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான்.
எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்!
நிபுணர் குழு
ரஷ்ய தடுப்பூசியை ஏற்பதா இல்லையா என்பதை மருத்துவ நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள், இந்த மருந்தை பயன்படுத்தப்போவதில்லை என தெரிகிறது.
வயது வரம்பு
பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலானவர்கள், 18 வயது முதல் 60 வயதானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் என்று, 3 வகைப் பிரிவினருக்கான தடுப்பூசிகளை ரஷ்யா அங்கீகரிப்பது நடைமுறையில் உள்ளது. கொரோனா தடுப்பூசி, 18 முதல் 60 வயது பிரிவினரிடையே நடைபெற்ற ஆய்வில்தான் சக்சஸ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரையல்
எனவே, 18 வயதுக்கு கீழேயும், 60 வயதுக்கு மேலேயும் உள்ளோருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட கூடாது என்று, ரஷ்யா அறிவித்துள்ளது. டிரையல் முடியும் வரை தற்காலிகமாக இந்த நடைமுறையை பின்பற்ற, ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சக அறிவியல் மையத்தின் தலைவர் விளாடிமிர் போன்ட்டராவ் தெரிவித்துள்ளார்.
நன்றாக இருக்கிறார்
இருப்பினும், தடுப்பூசியை உருவாக்கிய கமலேயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், தனக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகவும், தான் நன்றாக உள்ளதாகவும் கூறினார். அவர் 60 வயதை தாண்டியவராகும்.
தயார் நிலையில் தடுப்பூசி
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறுகையில், கோவிட் தடுப்பூசிகளின் முதல் பேட்ஜ் இரு வாரங்களில் தயாராகும் என்றும், மருத்துவர்கள் உள்ளிட்ட, தானாக முன்வரும் மக்களுக்கு அது வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஸ்பூட்னிக் 5 என அழைக்கப்படும் தடுப்பூசியின் கட்டம் 1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகள் ஆகஸ்ட் 1ம் தேதி நிறைவடைந்ததாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.