ஸ்புட்னிக் வேக்சின் 95% வெற்றி.. ரஷ்யா போட்ட இமாலய திட்டம்.. ஒரு டோஸ் விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க
மாஸ்கோ: ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்புட்னிக் வி வேக்சின் 95% வெற்றி வெற்றிபெற்றள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்தது. வெறும் மூன்று மாத சோதனையில் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா உருவாக்கி உள்ள வேக்சினுக்கு ஸ்புட்னிக் -வி (Sputnik V) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு கட்ட சோதனை அதிக பேரிடம் செய்யப்படாத நிலையில் தற்போது மூன்றாம் கட்ட சோதனை நடந்து வருகிறது. மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்யப்பட்டு வருகிறது. அந்த நாட்டு ராணுவத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெற்றி
ஸ்புட்னிக் வி வேக்சின் 95% வெற்றி வெற்றிபெற்றள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.ஒரு டோஸ் ஸ்புட்னிக் வேக்சின் ரூ. 700க்கும் குறைவாக கிடைக்கும். உலகம் முழுக்க இந்த மருந்து கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்கப்படும். அமெரிக்க டாலர் மதிப்பில் 10 டாலருக்கும் குறைவான விலையில் இந்த மருந்து விற்கப்பட உள்ளது. ரஷ்ய மக்களுக்கு இந்த மருந்து இலவசம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எத்தனை சோதனை
இந்த மருந்து மொத்தம் 22000 பேரிடம் முதல் டோஸ் கொடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் 19000க்கும் அதிகமான நபர்களிடம் இரண்டாம் டோஸ் கொடுத்து சோதனை செய்யப்பட்டது. ரஷ்யா மட்டுமின்றி அமீரகம், வெனிசுலா போன்ற மற்ற சில நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
தடுப்பாற்றல்
இந்த வேக்சினின் முதல் டோஸ் எடுத்த பின் 28 நாட்களில் தடுப்பு சக்தி கிடைக்கிறது. இந்த மருந்து பெற்ற நபர்களில் 91.4% பேருக்கு இந்த கொரோனா தடுப்பாற்றல் கிடைத்துள்ளது. அதன்பின் 42 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 95% பேருக்கு இந்த கொரோனா தடுப்பாற்றல் கிடைத்துள்ளது.
மேலும் அதிகரிக்கும்
இரண்டாவது டோஸ் கொடுத்து ஒரு வாரத்தில் இந்த தடுப்பாற்றல் உயர்ந்துள்ளது. இதனால் இந்த மருந்து எடுத்து மூன்று வாரங்கள் கழித்து இதன் தடுப்பு சக்தி மேலும் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது தடுப்பாற்றல் 95%க்கும் அதிகமாக இருக்கலாம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால் பெரிய அளவில் பின்விளைவுகள் ஏற்படவில்லை.
திட்டம்
இந்த மருந்தை 2 -8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைத்தாலே போதும். மைனஸ் டிகிரி குளிரில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதனால் இதை எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். இதன் விலையும் குறைவு. இதனால் இந்த மருந்தை மற்ற நாடுகள் அதிகம் வாங்கும். அதிக அளவில் இது விற்பனை ஆகும் என்று ரஷ்யா நினைக்கிறது.