இரண்டாம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்: மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் கண்கவர் பேரணி
மாஸ்கோ: இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றத்தின் 70ஆம் ஆண்டு நினைவு தின பேரணி இன்று ரஷ்யா தலைநகரான மாஸ்கோ நகரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் இந்த கண்கவர் பேரணியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷ்யா அதனுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு 1941 ஜுன் 22ஆம்தேதி ரஷ்யா மீது படையெடுத்தார், ஹிட்லர். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா மீது ஹிட்லர் படையெடுத்தது முக்கியமான கட்டமாகும். ரஷ்யாவுக்கு ஹிட்லரால் பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்த முடிந்ததே தவிர, வெற்றி பெறமுடியவில்லை.
"இரும்பு மனிதர்" ஸ்டாலின் தலைமையில் ரஷ்ய மக்கள் விஸ்வரூபம் எடுத்து ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தனர். அது போரின் போக்கையே மாற்றியது. ஜெர்மனி ராணுவத்தை ஓட ஓட விரட்டி வெற்றி கண்டது ரஷ்யா. காரணம் இயற்கை ரஷ்யர்களுக்கு சாதகமாக அமைந்ததே. இந்த வெற்றியை ரஷ்யா உற்சாகமாக பல நாட்டுத் தலைவர்களை அழைத்து கொண்டாடி வருகிறது.
மாஸ்கோ விழாக்கோலம்
இரண்டாம் உலகப்போர் 70ஆம் ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் மாஸ்கோ நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரம்மாண்டமான செஞ்சதுக்கத்தில் பல நாட்டு ராணுவ வீரர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தனர். பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர், சிறுமியரும் கூட ரஷ்யநாட்டு ராணுவ உடைகளை அணிந்து வந்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
25 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
ரஷ்யா நடத்திய இந்த வெற்றி பேரணி நிகழ்ச்சியில் 25நாடுகளைச்சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நம் இந்தியக்குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த வெற்றிப் பேரணியில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
இந்த வெற்றி பேரணி நிகழ்ச்சியை அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் புறக்கணித்த நிலையில் பிரணாப்முகர்ஜியின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் பல நாட்டு ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி கம்பீரமாக மிடுக்குடன் வீர நடை போட்டனர். ரஷ்ய வெற்றிப்பேரணியில் இந்திய ராணுவத்தின் அணிவகுப்பும் முதன் முறையாக இடம் பெற்றுள்ளது. நம் நாட்டு வீரர்கள் மூவர்ணக் கொடியேந்தி கம்பீர நடை பயின்றனர்.
சீன அதிபர் பங்கேற்பு
ரஷ்யா நடத்திய வெற்றிப்பேரணியில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கும் பங்கேற்றுள்ளார். சீனா நாட்டு ராணுவ வீரர்களும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
ராணுவ ஊர்திகள்
இந்த அணிவகுப்பில் ரஷ்ய நாட்டின் பிரம்மாண்ட ராணுவ ஊர்திகள், ஏவுகணைகள்,
அமெரிக்கா எதிர்ப்பு
கடந்த 50வது மற்றும் 60வது வெற்றிப்பேரணியின்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதிகள் பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் முயற்சிகளை முறியடிக்கவும் முயற்சி செய்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரராக பல்வேறு நிதித்தடைகளையும் அமெரிக்கா மேற்கொண்டது.
முக்கியத்துவம் வாய்ந்த பயணம்
இதனிடையே இந்திய குடியரசுத்தலைவரின் இந்த பயணம் மிக சிறப்பு வாய்ந்ததுடன் இந்தியா-ரஷ்யா மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்தும். இந்த பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவரும் பிரணாப் முகர்ஜியுடன் மாஸ்கோ சென்றுள்ளார்.
ஒப்பந்தங்கள் கையெழுத்து
குடியரசுத்தலைவரின் இந்த பயணத்தின்போது அறிவியல்,தொழில் நுட்பம் மற்றும்உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடிக்கள் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ரஷ்யாமேற்கொள்ளும் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இரண்டாம் முறையாக பயணம்
கடந்த 10ஆண்டுகளாக இந்த வெற்றிப்பேரணியில் இந்திய அரசு தரப்பில் எந்த தலைவரும் கலந்து கொள்ளவில்லை.. கடந்த 1995ம்ஆண்டு மாஸ்கோவில் வெற்றிப்பேரணி நடந்தபோது பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டிருந்தார்.அப்போது அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இந்திய குடியரசுத்தலைவராக இந்த பேரணியில் பங்கேற்றுள்ளார் பிரணாப்முகர்ஜி என்பது சிறப்பம்சமாகும்.