நண்பேன்டா.... ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யாவுடன் கை கோர்க்கும் தலிபான்கள்!
காபூல்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யாவுடன் கை கோர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்கான் தலிபான்கள் மும்முரமாக மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவும் தலிபான்கள் தொடர்பு கொண்டு பேசிவருவதை உறுதி செய்துள்ளது.
சிரியா, ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு ஆப்கானிஸ்தான் என கூறப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் கால் பதித்துவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் என தென்னாசிய நாடுகளை ஒரு கை பார்த்துவிடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தலிபான்கள் முனைப்புடன் காத்திருக்கின்றனர். அண்மையில் குண்டூஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கர யுத்தம் தலிபான்கள் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கிவிட்டர் என்பதை வெளிப்படுத்துவதாகவே இருந்தது.
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அண்மையில் ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தலிபான்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தை ரஷ்யாவும் அதன் அண்டை நாடுகளும் ஆதரிக்காது என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் உண்மையில் இந்த நாடுகள் அனைத்தும் இரட்டை வேடமே போடுகின்றன.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் சிரியாவை தாண்டினால் அது அரேபிய தீபகற்பத்தில் கால்பதித்து அண்டைநாடான ஆப்கான் வரைக்கும் வந்து விடும் என்பதை உணர்ந்தே இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கை ஓங்குவதையே ரஷ்யா விரும்பவும் செய்கிறது.
ரஷ்யா- தலிபான்களிடையேயான நேரடி பேச்சுவார்த்தை 2013ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது ரஷ்யாவின் ஹெலிகாப்டர் ஒன்று தலிபான்கள் கட்டுப்பாட்டு பகுதியில் தரையிறங்கியது. அதில் இருந்த விமானியை தலிபான்கள் சிறைபிடித்தனர். இது தொடர்பாக தலிபான்களுடன் ரஷ்யா பேச்சுவார்த்தையை நடத்தியது. பெருமளவும் பணமும் ஆயுதங்களையும் ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்டு அந்த விமானியை தலிபான்கள் விடுவித்தனர்.
இதேபோல் ரஷ்யர்கள் செல்வாக்கு செலுத்தும் தஜிகிஸ்தான் நாடும் தலிபான்களுடன் நேசக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது. அண்மையில் தலிபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தாஹி ஷாமால்ஷி போலி பாஸ்போர்ட் மூலம் காபூலில் இருந்து தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேவுக்கு சென்றிருந்தார். அப்போதுதான் தஜிகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் 4 பேரை தலிபான்கள் கைது செய்திருந்தனர்.
இந்த 4 பேரையும் விடுவிக்க தலிபான்கள் கேட்டது பெருமளவு ஆயுதங்கள்தான்.. தஜிகிஸ்தானும் இதற்கு ஒப்புக் கொள்ள அந்த ஆயுதங்களையும் துஷன்பேயில் வைத்து ஆய்வு செய்தார் தாஹி ஷாமால்ஷி. இந்த பயணத்தின் மூலமாக தலிபான்களுக்கு பெருமளவு ஆயுதங்கள் கிடைத்தன. இந்த ஆயுதங்கள் மூலமே குண்டூஸ் மாகாணத்தை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றினர். 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு தலிபான்கள் வசம் வீழ்ந்த முதல் பெரிய நகரம் இது.
இந்த நகரத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது, எங்களால் அண்டை நாடுகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கிறோம் என்றும் பிரகடனப்படுத்தி ரஷ்யா, தஜிகிஸ்தானுக்கு நம்பிக்கை அளித்திருந்தனர்.
இதேபோல் சீனாவுடனும் தலிபான்கள் நேசக்கரம் நீட்டி வருகின்றனர். சீனாவுக்குள் தனிநாடு கோரும் கிளர்ச்சி குழுவினர் ஆப்கானிஸ்தானில் அடைக்கலமாகி இருப்பதை அந்நாடு விரும்பவில்லை என தலிபான்களிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தலிபான்களும் அவர்கள் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தால் நிச்சயம் வெளியேற்றுகிறோம் என வாக்குறுதி அளித்திருக்கின்றனர்.
இப்படி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஆப்கானிஸ்தானுக்குள் வந்துவிட்டால் தங்களது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்துடன் அண்டை நாடுகளை நேச சக்திகளாக்கி வருகின்றனர் தலிபான்கள். இதனிடையே தலிபான்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று உறுதி செய்திருக்கின்றனர்.
அன்று ஆப்கானில் ரஷ்யா ஆதரவு அரசு இருக்கக் கூடாது என்று எந்த தலிபான்கள் ஆயுத களத்தில் குதித்தார்களோ இன்று அதே தலிபான்கள் ரஷ்யாவுடன் நட்புக் கரம் நீட்டுகிற விசித்திர வரலாறு அரங்கேறிக் கொண்டிருக்கிறது!