சாட்டிலைட்களை தாக்கும் டெக்னாலஜி.. விண்வெளியில் ரஷ்யாவின் பவர்-புல் ஆயுதம்.. புடின் எடுத்த அஸ்திரம்!
மாஸ்கோ: வானிலேயே சாட்டிலைட்டுகளை தாக்கி அழிக்கும் ஆண்டி சாட்டிலைட் திட்டத்தை ரஷ்யா ரகசியமாக செயல்படுத்தி வருவதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டி இருக்கிறது.
Recommended Video
நவீன 21ம் நூற்றாண்டில் ஒரு நாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் போர் வந்தால், அதில் முக்கிய பங்கு வகிக்க போகும் விஷயமாக இருப்பது சாட்டிலைட்கள்தான். உளவு தகவல்களை சேகரிப்பது தொடங்கி, வேகமான தொலைத்தொடர்பு, படைகள் குவிப்பை கண்டறிவது என்று பல விஷயங்களுக்கு சாட்டிலைட்கள் உதவுகிறது.
ராணுவ பயன்பாட்டிற்கு என்றே தனியாக ராணுவ சாட்டிலைட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சாட்டிலைட்களை அழிக்க ரஷ்யா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
ரஷ்யா ஆயுதம்
ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் சாட்டிலைட்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளது. இந்தியா இதற்காக மிஷன் சக்தி ஏவுகணைகளை சோதனை செய்து அதில் வெற்றியும் பெற்றது. சில சிறிய சிறிய சாட்டிலைட்டுகளில் லேசர் கருவிகளை பொருத்தி மற்ற சாட்டிலைட் மீது தாக்குதல் நடத்தும் திட்டங்களும் கூட போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒருபடி மேலே போய் ரஷ்யா இதில் புதிய சோதனையை செய்துள்ளது.
என்ன சோதனை
அதன்படி ரஷ்யா விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி , அதன் மூலம் பிற நாட்டு சாட்டிலைட்களை அழிக்கும் சோதனையை செய்து வருகிறது. பிற நாட்டு சாட்டிலைட் அருகே சென்று, அதோடு சுற்று வட்டப்பாதையில் சுற்றி , பின் அதையே தாக்கி அழிக்கும் திட்டத்தை ரஷ்யா கையில் எடுத்துள்ளது. அதே சமயம் வெளிநாட்டு சாட்டிலைட் அருகே சென்று அதை ஹேக் செய்து, அதன் தகவல்களை திருடுவது தொடர்பான சோதனையையும் ரஷ்யா செய்து இருக்கிறது .
குறி வைத்தது
மொத்தமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட எதிரி நாடுகளை குறி வைத்து ரஷ்யா இந்த திட்டத்தை களமிறக்கி உள்ளது. அந்த நாடுகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சண்டை வரலாம் என்று ரஷ்யா நினைக்கிறது. அதனால் இப்போதே அவர்களின் சாட்டிலைட்களை ஹேக் செய்யவும் , அழிக்கவும் ரஷ்யா இந்த ஆண்டி சாட்டிலைட் திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று கூறுகிறார்கள்.
சோதனை செய்தது
இதற்கான சோதனையை ரஷ்யா கடந்த 15ம் தேதி செய்து இருக்கிறது. ரஷ்யாவின் சாட்டிலைட் ஒன்று பிரிட்டன் சாட்டிலைட்டுக்கு மிக அருகில் சென்று இருக்கிறது. அங்கு இருக்கும் சாட்டிலைட்டை தாக்குவது போல சென்று இருக்கிறது. ரஷ்யா இதை சோதனை முயற்சியாக செய்து பார்த்து இருப்பதாக பிரிட்டன் குற்றச்சாட்டு வைக்கிறது. ரஷ்யா இதற்கு பதில் அளிக்கவில்லை.
பிரிட்டன் என்ன சொன்னது
பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்கனவே பல்வேறு விஷயங்களில் சண்டை இருக்கிறது. முக்கியமாக பிரிட்டனின் கொரோனா மருந்து ஆராய்ச்சியை ரஷ்யா திருடியதாக புகார் உள்ளது. ஹேக்கிங் மூலம் கொரோனா வேக்சின் குறித்த ஆராய்ச்சியை ரஷ்யா திருடியதாக புகார் உள்ளது. இந்த புகாரை பிரிட்டன் ஒரு வாரம் முன் வைத்தது . தற்போது மீண்டும் ஒரே வாரத்தில் ரஷ்யா மீது சாட்டிலைட் புகாரை பிரிட்டன் வைத்துள்ளது .
அமெரிக்கா எப்படி
கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா இது தொடர்பாக புகார் வைத்து இருந்தது. எங்களின் சாட்டிலைட் அருகே ரஷ்யாவின் சாட்டிலைட் ஒன்று வந்து சென்றது . மோதுவது போலவே அருகில் வந்தது. ரஷ்யா எதையோ திட்டமிட்டு இப்படி செய்கிறது என்று அமெரிக்கா கூறியது . தற்போது அதே புகாரை பிரிட்டன் வைக்க தொடங்கி உள்ளது . அதிபர் புடின் என்ன திட்டத்துடன் இந்த செயலில் இறங்கி இருக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.