சிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்
டமாஸ்கஸ்: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்யத் தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அதிபர் ஆசாத்தின் குடும்பத்தினரே ஆட்சியில் இருந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை வான் வழியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குண்டு வீசி தாக்கி வந்த ரஷ்யா, தற்போது போர்க்கப்பல்களையும் களத்தில் இறக்கியுள்ளது.
இந்நிலையில், சிரிய அரசு எதிர்ப்பு போராளிகளுக்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்யா நடத்தி வரும் அதிரடித் தாக்குதலுக்கு ஆதரவாகவும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இது சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் என்ற இடத்தில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் முன்பு நடைபெற்றது. இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு அடுத்தடுத்து இரண்டு ராக்கெட் வந்து விழுந்தது. திடீரென ராக்கெட் வீசப்பட்டதால் மக்களிடையே பீதி எழுந்தது. பலர் கலைந்து ஓடினர். இருப்பினும் யாரேனும் இதில் காயமடைந்தனரா அல்லது இறந்தனரா என்பது குறித்துத் தகவல் இல்லை.
முன்னதாக அரசு எதிர்ப்புப் படையினர் ரஷ்யத் தூதரகத்தைத் தாக்க குறி வைத்துக் காத்திருந்தனர். கடந்த காலத்திலும் கூட தாக்குதல்கள் நடந்துள்ளது. ஆனால் தற்போது நடந்த தாக்குதல் தூதரகத்தைக் குறி வைத்து வீசப்பட்டதா அல்லது மக்களைக் குறி வைத்து நடந்ததா என்பது தெரியவில்லை.