சிரியாவில் ரஷ்யா போர் விமானங்கள் சரமாரி குண்டுவீச்சு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 48 பேர் பலி!
டமாஸ்கஸ்: சிரியாவில் ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 மாத கைக்குழந்தை உட்பட 48 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்தை எதிர்க்கும் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழுவான ப்ரீ சிரியா ஆர்மி, ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல் நுஸ்ரா முன்னணி ஆகியவற்றை ஒடுக்குவதற்காக ரஷ்யா களமிறங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டு வருவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து வருகிறது.
ஆனால் சனிக்கிழமையன்று ஹோம்ஸ் நகரத்தில் ரஷ்யா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 48 பேர் பலியாகி உள்ளனர். அதேநேரத்தில் ரஷ்யாவோ 48 ஐ.எஸ். தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய அக்குடும்பத்தைச் சேர்ந்த அபு அப்பாஸ் கூறுகையில், ரஷ்யா சொல்வதைப் போல நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல; 70 வயது மூதாட்டியும் ஒரு மாத கைக்குழந்தையுமா தீவிரவாதிகள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.