இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும்
மாஸ்கோ: ஆகஸ்ட் 10 முதல் 12ம் தேதிக்குள் ரஷ்யா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியை 'பதிவு செய்ய' திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள, கமாலேயா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி உருவாக்கிய இந்த தடுப்பூசி, பதிவு செய்யப்பட்ட மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே தடுப்பூசி ஜூலை மாத இரண்டாவது வாரத்தில், முதல்கட்ட மனித சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்டது.
முந்திக் கொண்ட ரஷ்யா...தயாரானது கொரோனா தடுப்பு மருந்து...மக்களுக்கு செலுத்துகிறது!!
இரண்டாம் கட்டம்
இரண்டாம் கட்ட மனித டிரையல்கள் ஜூலை 13ம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட டிரையல்களை விரைந்து முடித்துவிட்டு தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரஷ்யா அவசரம் காட்டி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கமலேயா தடுப்பூசி "நிபந்தனை பதிவு" செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது மூன்றாம் கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டாமலேயே தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படும். தடுப்பூசி உற்பத்தி செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் டாக்டர்களுக்கு
அதேநேரம், முழுக்க மருத்துவ பரிசோதனைகள் முடியும் வரை, இந்த தடுப்பூசி சுகாதார துறையில் உள்ள டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது. உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்தால்தான், பிற நாடுகளில் அதை பயன்படுத்த முடியும்.
மூன்றாம் கட்டம் முக்கியம்
இரண்டாம் கட்டத்தில், நோய்க்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை தடுப்பூசி தூண்டுகிறதா என்பது மதிப்பிடப்படுகிறது. இந்த கட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் இறுதி கட்டம் பொதுவாக பல ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி வழங்கி பரிசோதிக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்கள், தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனரா என்பது பற்றி பிறகு ஆய்வு செய்யப்படும். இப்படித்தான் 3 கட்டங்களாக தடுப்பூசி சோதனை நடக்கும். இதற்கு பல மாதங்களாகலாம். ஆனால் ரஷ்யாவோ, 2வது கட்டத்திலேயே தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.
Recommended Video
ரஷ்யா திட்டம்
விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் இப்படி தடுப்பூசியை அவசரமாக வெளியிடுவதற்கு எதிராக எச்சரிக்கின்றனர். பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதுதான் முதல் பணி என ரஷ்யா உறுதியாக உள்ளது.