செல்ஃபிக்கு போஸ் கொடுக்கையில் ரஷ்ய பெண்ணின் நெற்றிப்பொட்டில் பாய்ந்த துப்பாக்கி குண்டு
மாஸ்கோ: செல்ஃபிக்கு போஸ் கொடுக்கையில் ரஷ்யாவைச் சேர்ந்த 21 வயது பெண் எதிர்பாராவிதமாக தன்னைத் தானே நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொண்டார்.
உலக மக்களில் பலர் செல்ஃபி மோகம் பிடித்து அழைகிறார்கள். எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவ்வாறு செல்ஃபி எடுத்த ஒரு ரஷ்ய பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 21 வயது பெண் தனது அலுவலக பாதுகாவலர் விட்டுச் சென்ற துப்பாக்கியை எடுத்து அத்துடன் செல்ஃபி எடுத்தார். ஒரு கையில் செல்போன் மறுகையில் துப்பாக்கியை பிடித்து செல்ஃபி எடுத்தார்.
அப்போது அவர் எதிர்பாராவிதமாக ட்ரிக்கரை அழுத்தியதில் துப்பாக்கியில் இருந்த குண்டு அவரது நெற்றிப் பொட்டில் பாய்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விடுமுறையில் செல்லும் முன்பு பாதுகாவலர் தனது துப்பாக்கியை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். அதை எடுத்து தான் அந்த பெண் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார்.
17 சதவீத அமெரிக்கர்கள் வாகனத்தை ஓட்டும்போது செல்ஃபி எடுப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. செல்ஃபி எடுக்கையில் பலியானவர்கள், கிட்டத்தட்ட மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.