அமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு குறி.. ஐஎஸ் தீவிரவாதிகள் போல நாடகம் ஆடிய ரஷ்யா!
அமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போல நாடகம் ஆடி ரஷ்ய அரசை சேர்ந்த சிலர் மிரட்டி இருக்கிறார்கள்.
நியூயார்க்: அமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போல நாடகம் ஆடி ரஷ்ய அரசை சேர்ந்த சிலர் மிரட்டி இருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொல்ல போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது உலக நாடுகளின் மீது ரஷ்ய அரசு மறைமுகமாக போர் ஒன்றை நடத்திக் கொண்டு இருக்கிறது. சைபர் போர் எனப்படும் கணினி மூலம் இணையத்தை பயன்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக அமெரிக்க அரசை மிரட்டி வருகிறது.
அந்த வகையில்தான் தற்போது அந்த நாடு அமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகளை மிரட்டி இருக்கிறார்கள். ஐஎஸ் தீவிரவாதி வேசம் போட்டு இவர்கள் நடத்திய நாடகம் இப்போது அம்பலம் ஆகியுள்ளது.
மெசேஜ் சென்றது
கடந்த பிப்ரவரி 14ம் தேதி அமெரிக்காவின் உயரிய ராணுவ ரேங்கில் வேலை பார்க்கும் ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி ஏஞ்சலா ரிக்கெட்ஸ் என்பவருக்கு மெயில் ஒன்று சென்றுள்ளது. அதில் உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருரையும் இன்னும் சில மணி நேரத்தில் கொலை செய்ய போகிறோம் என்றுள்ளது. அதை தொடர்ந்து அதேபோல் இன்னும் 5 ராணுவ வீரர்களின் மனைவிக்கு இந்த மாதிரி கொலை மிரட்டல் மெயில்கள் சென்றுள்ளது.
விசாரணை நடத்தினார்கள்
இந்த மெயில்களில், நாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்க ராணுவம் செய்யும் பணிகளை எதிர்க்கும் பொருட்டு இந்த கொலையை செய்ய இருப்பதாக அதில் கூறியுள்ளனர். இதை விசாரிக்க அமெரிக்காவின் எஃப் பி ஐ அமைப்பு தனி குழுவை நியமித்தது. இது குறித்த விசாரணை கடந்த இரண்டு மாதமாக நடந்து வந்தது.
ரஷ்யாவை சேர்ந்தவர்கள்
தற்போது இதை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்துள்ளனர். ரஷ்ய அரசுக்கு நெருங்கிய அமைப்பு ஒன்றுதான் இந்த மோசமான கொலை மிரட்டலை விடுத்து இருக்கிறார்கள். தனியார் நிறுவனம் ஒன்றின் மெயிலை ஹேக் செய்து, அதை வைத்து எல்லோருக்கும் இப்படி மெயில் அனுப்பி கொலை மிரட்டல்விட்டு இருக்கிறார்கள். ஆனால் ராணுவ வீரர்களின் குடும்பத்தை ஏன் மிரட்ட வேண்டும் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அதே அமைப்பு
இதில் தற்போது இன்னொரு தகவலும் வெளியே வந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது, ஹிலாரி கிளிண்டன் மெயில் ஐடியை ஹேக் செய்ததும் இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. இந்த 6 பேரை மிரட்டிய அந்த குழு பேஸ்புக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்றையும் நிர்வகித்து வந்துள்ளது. அதன் மூலம் ஒரு ராணுவ வீரரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்தும் ரஷ்ய அரசு அமைதியாக இருப்பது குறிப்பித்தக்கது.