பாக். வெளியுறவு துறை செயலருடன் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சந்திப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலர் அய்ஜாஸ் அகமதுவை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு உறவுகள், பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதல், பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் டெல்லியில் பிரிவினைவாத அமைப்பினருடன் பேச்சு நடத்தியது ஆகிய சம்பவங்கள் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில் சார்க் நாடுகளுக்கு இந்திய வௌியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் நல்லெண்ண பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் பூடான், வங்கதேச நாடுகளைத் தொடர்ந்து இன்று அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலர் அய்ஜாஸ் அகமதுவை சந்தித்தார்.
கடந்த பல மாதங்களாக நின்று போயிருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. 7 மாதங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக அய்ஜாஸ் கூறுகையில், மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை தரும். காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் இந்திய வெளியுறவுத் துறைசெயலர் ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார்.