ஓ மை காட்.. பஸ்சை மிஸ் செய்துவிட்டு லிப்ட் கேட்ட சச்சின்!
லண்டன்: கிரிக்கெட் ஜாம்பவான், கோடீஸ்வர விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர் பஸ்சை மிஸ் செய்துவிட்டு, லிப்ட் கேட்டார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால், இரு நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டென்னிஸ் விளையாட்டு பிரியரான, சச்சின் டெண்டுல்கர், விம்பிள்டன் பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். 11ம் தேதி, கிரேட்ஹஸ்லி சென்ற அவர் அங்கிருந்து வெளியிட்ட டிவிட்டை பாருங்கள், "கடைசி பஸ்சை மிஸ் செய்துவிட்டு கிரேட்ஹஸ்லியில் நிற்கிறேன். யாராவது லிப்ட் தர முடியுமா" என்று கேட்டுள்ளார்.
டிவிட்டை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், தலைவா, நான் இந்தியாவில் இருக்கிறேன், என்னால் முடியவில்லையே என்றும், நான் மட்டும் அங்கிருந்தால், லிப்ட் என்ன தலைவா, என் காரையே கொடுத்திருப்பேன் என்றும் சகட்டுமேனிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
பஸ் நிறுத்தத்தில், சச்சின் காத்திருப்பது போன்ற இன்ஸ்டாகிராம் படத்தையும் அதில் இணைத்துள்ளார். இங்கிலாந்தில் பஸ் ஸ்டாப் என்று எழுதப்பட்ட ஒரு இடத்தில் நின்று கொண்டு சச்சின் தமாஷ் செய்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு பிறகுதான் புரிந்தது.