தீப்பிடிக்கும் சாம்சங் நோட் 7... அனைத்து போன்களையும் திரும்பப் பெற நடவடிக்கை!
நியூஜெர்சி (யு.எஸ்) : சாம்சங் நிறுவனம் நோட் 7 ஸ்மார்ட்போனை சந்தையிலிருந்தும், பயன்பாட்டிலிருந்தும் முற்றிலுமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
திடீரென்று தீப்படித்துக்கொள்ளும் அபாயம் இருந்ததால், உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போனை திரும்பப் பெறுவதற்கு சாம்சங் அழைப்பு விடுத்திருந்தது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தீப்பிடிக்காத பெட்டியை அனுப்பி அதில் மட்டுமே திருப்பி அனுப்பச் சொன்னார்கள்..
விமானத்தின் உள்ளே கையிலோ அல்லது லக்கேஜ் சூட்கேஸிலோ நோட் 7 எடுத்துச் செல்ல விமான நிறுவனங்கள் தடை விதித்திருந்தன.
அமெரிக்காவில் மட்டும் 19 லட்சம் நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்பப் பெறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 17.7 லட்சம் போன்கள் திரும்ப வந்து விட்டன. இன்னும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் போன்கள் பயன்பாட்டில் உள்ளன.
அவைகளை செயல் இழக்க வைப்பதற்கு டிசம்பர் 19 தேதி புதிய சாஃப்ட்வேர் அப்டேட் அனுப்ப உள்ளனர். இந்த சாஃப்ட்வேர் அப்டேட் ஆனதும், போனை மீண்டும் சார்ஜ் செய்ய முடியாது. வேலையும் செய்யாது.
ஆக, டிசம்பர் 19ம் தேதி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் நாள் குறித்துள்ளது . இன்னும் கையில் வைத்திருந்தால் திருப்பி அனுப்பி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
-இர தினகர்