கேலக்ஸி நோட் 7 தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தியது சாம்சங் !
சியோல்: பேட்டரிகள் தொடர்ந்து வெடிப்பதாகவும், அதிகமாக சூடாவதாகவும் வந்த புகாரை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட் 7 ரக மாடல் மொபைல் போன் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்த சாம்சங் நிறுவனம் மறுத்து விட்டது.
ஸ்மாட் போன் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கும் சாம்சங், நிறுவனம் கேலக்ஸி நோட் 7 என்ற புதிய மொபைல் போனை அண்மையில் அறிமுகம் செய்தது. இதனை பயன்படுத்திய அமெரிக்க மற்றும் கொரிய வாடிக்கையாளர்கள், இந்த போன் சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறுவதாக புகார் தெரிவித்தனர்.
மேலும் அதிகமாக சூடாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அனைத்து கேலக்ஸி நோட் 7 மாடல் ஸ்மார்ட்போன்களை திரும்பபெறுவதாக அறிவித்தது சாம்சங். இதன்பின்னர் ஆய்வக பரிசோதனையில் பேட்டரி குறைபாடுகள் உள்ளதை அறிந்த சாம்சங் நிறுவனம், அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. பின்னர் சில போன்களை மாற்றியும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
அவ்வாறு போன்களை மாற்றம் செய்து வழங்கிய போன்களில் 3 வாடிக்கையாளர்களின் போன்கள், சார்ஜ் செய்யும் போது மீண்டும் தானாக தீப்பிடித்ததுள்ளது. இதையடுத்து நோட்-7 உற்பத்தியை சாம்சங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்க தகவலை கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கி வரும் சாம்சங் நோட் 7 போன்களை விமானங்களில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.