அமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ் சர்ச்சில் புகுந்த மர்மநபர் கண்ணில் பட்ட நபர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகர சர்ச்சில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
சான் ஜோஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறன்று மாலை வழக்கமான பிரார்த்தனைகள் முடிந்து தேவாலயம் காலியாக இருந்தது. அப்போது தேவாலயம் அமைந்துள்ள சாலையில் வாழ்ந்து வரும் வீடற்ற நபர்கள் சிலர் குளிரில் இருந்து தப்பிக்க தேவாலயத்துக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்.
அப்போது மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் தேவாலயத்திற்குள் புகுந்தார். இதைப்பார்த்து தேவாலயத்துக்குள் இருந்த நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர் அவர்களை கத்தியால் சரமாரியாக குத்த தொடங்கினார். இதனால் கூச்சல் குழப்பம் உருவானது. அச்சத்துடன் பலரும் ஓடத்தொடங்கினர்.
விடாமல் விரட்டிய அந்த நபர் சற்றும் ஈவிரக்கமின்றி ஒவ்வொருவரையும் ஓட ஓட துரத்திச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் தேவாலயம் அமைந்துள்ள பகுதியை சீல் வைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
முன்னின்று காய் நகர்த்தும் கேம் சேஞ்சர்.. வெளியுறவுத்துறை அமைச்சராகும் ஆண்டனி.. பிடன் பிளான்
தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு சான் ஜோஸ் நகரின் மேயர் சாம் லிக்கார்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த நபர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ள சான் ஜோஸ் நகர போலீசார் தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.