ஐரோப்பாவில் சமஸ்கிருதம் படிக்க மாணவர்கள் ஆர்வம்! ஜெர்மனியில் 14 பல்கலை.களில் பாடம்!
பெர்லின்: இந்தியாவில் ஜெர்மன் பாடத்துக்கு பதிலாக, சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுக்க பாஜக அரசு முடிவெடுத்தபோது, அதிருப்தி வெளிப்படுத்தியது ஜெர்மன் அரசு. ஆனால், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், சமஸ்கிருதம் படிக்க இளைஞர்கள் அதிகம் காட்டுகிறார்கள். மொத்தம் 14 பல்கலைக்கழகங்களில், அங்கு சமஸ்கிருத பாடம் கற்றுத்தரப்படுகிறது.
கோடைவிடுமுறையான தற்போது, ஹெடில்பெர்க் பல்கலைக்கழகம், ஸ்போக்கன் சம்ஸ்கிருத பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாம். சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில், இந்த பயிற்சி மையங்களை இப்பல்கலை. நடத்துகிறது.
"பதினைந்து வருடங்களுக்கு முன்பு, சமஸ்கிருத பாடத்தை தொடங்கியபோது, அடுத்த இரு வருடங்களிலேயே, இதை இழுத்து மூட வேண்டியதுதான் என்று நினைத்தோம். ஆனால், வரவர சமஸ்கிருதத்தை கற்க மாணவர்கள் காண்பித்த ஆர்வம், இப்போது ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும், எங்களை விரிவடையச் செய்துள்ளது" என்கிறார், பல்கலை. செம்மொழி பிரிவு தலைவரும், பேராசிரியருமான டாக்டர்.அக்சல் மைக்கேல்.
ஜெர்மனி நாட்டில், முன்னணியிலுள்ள 14 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்றுத்தரப்படுகிறது. மேலும், 34 நாடுகளில் இருந்து, 254 மாணவர்கள், கோடை கால ஸ்போக்கன் சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டுள்ளனர்.
ஜெர்மனி தவிர்த்து, அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஆட்சிமைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிக மாணவர்கள் சமஸ்கிருதம் கற்கின்றனர்.
"சமஸ்கிருதத்தை ஒரு மதத்தினரோடு அல்லது அரசியலோடு பொருத்தி பார்ப்பது பெரிய முட்டாள்தனம். சமஸ்கிருதம், ஒரு புராதான பொக்கிஷம். புத்த மதத்தின், முக்கிய தத்துவங்கள் கூட சமஸ்கிருதத்தில்தான் உள்ளன. தத்துவம், வரலாறு, மொழிகள், அறிவியல், கலாசாரம் போன்றவற்றை முழுமையாக, கருத்து பிறழ்வு இல்லாமல் அறிந்து கொள்ள வேண்டுமானால், எந்த மொழியில் அவை இயற்றப்பட்டதோ, அதே மொழியில் நேரடியாக படிப்பதுதான் நல்லது" என்கிறார் அக்சல் மைக்கேல்.
ஹெடில்பர்க் பல்கலை.யின் மருத்துவ மாணவரும், சமஸ்கிருதத்தை படித்து வருபவருமான பிரான்சிசா லுனாரியும், இதை ஒப்புக்கொள்கிறார். "மனித மனங்களை, அவர்களின் எழுத்தின் ஊடே சென்று புரிந்துகொள்வதுதான் சிறப்பானதாக இருக்க முடியும். கலாசாரம், சமூகம் குறித்த புரிதலுக்கும், மொழியறிவு முக்கியம்" என்கிறார் அவர்.
இந்திய பள்ளிகளில், ஜெர்மன் பாடத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தை கற்றுத்தர மோடி அரசு உத்தரவிட்டபோது, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது ஜெர்மனி அரசு. ஆனால், மோடியோ, "இந்தியாவின் மதசார்பின்மை மிகவும் வலிமையானது, ஒரு மொழியை கற்பதற்கும், மதசார்பின்மைக்கும் சம்மந்தம் இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.