GSAT-31: விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்... இணைய தள சேவை ஸ்பீடு பறக்கும்
கயானா: தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40-வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் தகவல் பரிமாற்றம், பெருங்கடல் ஆய்வு குறித்த தகவல்களை அளிக்கும். தொலை தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். தகவல் தொடர்பு சேவைகளுக்கான, 'ஜிசாட்-31' செயற்கைக்கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமியில் இருந்து 14,638 கிலோ மீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. செல்போன் சேவை, டி.டி.ஹெச் சேவை, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, தொலைக்காட்சி இணைப்பு போன்ற பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் உதவும். இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும்.
முன்னதாக, இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரைன்-5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பரில் செலுத்தப்பட்டது.