சாத்தான்குளம்.. உரிய நீதி வேண்டும்.. முதல்வருக்கு சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் கடிதம்
கலிபோர்னியா: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து அமெரிக்காவில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து அமெரிக்காவில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் கடிதம் எழுதியுள்ளது.
அவர்கள் தங்கள் கடிதத்தில், கொரோனா தொற்று உலகத்தைப் புரட்டிப் போட்டுள்ள இந்த சூழ்நிலையில் நம் அனைவரும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் திரு. பென்னிக்ஸ் எங்களைப் போன்று சாதாரண குடிமக்களே.
அவர் சட்டத்தை மீறும் வகையில் தம் நிறுவனத்தைத் தாமதமாக மூடியது தவறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு வழக்கு பதிவிடாமல், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் கைது செய்து, சித்திரவதை செய்துள்ளனர். அவர்கள் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளனர் .காவல்துறை இந்த வழக்கை முறையான குற்றப் பிரிவுகளில் பதிவிடாமல், நீர்த்துப்போய் விடச் செய்து விடுவார்களோ என்கிற அச்சம் மேலோங்குகிறது.
கடந்த மே மாதம், 25ம் தேதியன்று அமெரிக்கா - மின்னேயாபொலிஸ் நகரில், திரு. ஜார்ஜ் பிளோய்ட் அவர்கள் காவல் துறை அதிகாரி ஒருவரால் கழுத்து நெறித்து கொல்லப்பட்டு இறந்த நிலையில், உலகெங்கும் மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கின்ற இந்த தருணத்தில் "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்" கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தது மேலும் வேதனை அளிக்கிறது.
சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினி கற்பழிப்பு மற்றும் அவர் கணவர் நந்தகோபால் கொலை வழக்கில் IPC 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாததால் அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்காமல் போனது என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளோம். விசாரணை மரணங்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் புதிதல்ல என்று இதனையும் கடந்து போக விடாமல் குற்றம் புரிந்த காவல் துறை ஊழியர்கள் அனைவரையும் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்தி நீதி விசாரணை செய்து தண்டனை வழங்க ஆவண செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் இருவர் பலி- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இந்தியா போன்ற ஒரு மக்களாட்சியில், சாதி, மத, இன, நிற வேறுபாடின்றி, பயமின்றி எந்த ஒரு குடிமகனும் வாழ வகை செய்யுமாறு ஒரு தீர்ப்பை வழங்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம். நம்பிக்கைகளுடன் நன்றி கலந்த வணக்கங்கள், என்று அமெரிக்காவில் இருக்கும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.