உயிரோடு பின்லேடன்... பரபரப்புக்காக ஒரு இணையதளம் கிளப்பிவிட்ட செய்தி
நியூயார்க்: பின்லேடன் உயிருடன் இருப்பதாக அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எர்வர்டு ஸ்னோடன் கூறியதாக வெளியான செய்தி ஒரு இணையதளம் பரபரப்புக்காக வெளியிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எட்வர்டு ஸ்னோடன் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். பஹாமாஸில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒசாமா தற்போதும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஊழியர்கள் பட்டியலில் உள்ளார். அவருக்கு மாதாமாதம் 6 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் அமெரிக்கா அளித்து வருகிறது.
பாகிஸ்தானில் ஒசாமா கொல்லப்பட்டது போன்று பொய்யான நாடகத்தை அமெரிக்கா நடத்தியது. ஒசாமா மற்றும் அவரது குடும்பத்தாரை பஹாமாஸில் யாருக்கும் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நாடகத்திற்கு பாகிஸ்தான் உளவுப்படையும் துணை போனது.
தாடியும், ராணுவ ஜாக்கெட்டும் இல்லாமல் ஒசாமாவை யாராலும் அடையாளம் காண முடியாது. ஒசாமா உயிருடன் தான் உள்ளார் என்பதை நான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அந்த புத்தகம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது எனத் தெரிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் இந்த தகவல் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர்தான் பரபரப்புக்காக தகவல்களை வெளியிடும் worldnewsdailyreport.com இணையதளமே இந்த செய்தியை வெளியிட்டது தெரியவந்தது.