சனி கிரக நிலாவில் கடல்... உயிரினங்கள் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை
வாஷிங்டன்: சனி கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளில் ஒன்றான என்சிலாடஸில் கடல் இருந்ததை நாசா கண்டுபிடித்துள்ளது. எனவே முன்னர் அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக் கிரகத்தைச் சுற்றி இதுவரை 62 துணைக் கோள்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இவற்றில் 53 நிலவுகள் உத்தியோக பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிநிலவுகளும் (Moonlets) சனியைச் சுற்றி வலம் வருகின்றன.
இதில் மிகப்பெரியது டைட்டன். மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை. இவைகளில் ஒன்று தான் என்சிலாடஸ்.
சனி கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1997ம் ஆண்டு ஆக்டோபரில் காசினி என்ற விண்கலத்தை அனுப்பியது. காசினியானது சனி கிரகத்தின் என்சிலாடஸ் நிலாவின் வடக்குப் பகுதிக்கு ஆயிரம் மைல் தொலைவில் இருந்தபோது, அப்பகுதியை படம் எடுத்து அனுப்பியது.
வரிகளும், பள்ளங்களும்...
அந்தப் படத்தில் வரிகளும், பள்ளங்களும் இருந்தன. அவை, பூமியைச் சுற்றி வரும் நிலவில் இருக்கும் வரிகள், பள்ளங்களுக்கு இணையாக உள்ளது.
கடல்...
மேலும் காசினி அனுப்பியுள்ள படத்தை நுணுக்கமாக ஆராய்ந்ததில், அங்கு ஏற்கனவே கடல் இருந்ததை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
விண்வெளி விந்தைகள்...
இது தொடர்பாக கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள காசினி திட்டத்தில் பணியாற்றும் பால் ஹெல்பென்ஸ்டீய்ன் கூறுகையில், ‘இதுபற்றி உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது. விண்வெளி விந்தைகளை தீர்த்து வைக்க ஆர்வம் காட்டி வருகிறோம்.
ஆச்சரியங்கள் வெளிப்படும்...
அடுத்த இரண்டு வாரங்களில், என்சிலாடஸ் நிலவை காசினி வெகு அருகில் நெருங்கும். அப்போது அனுப்பி வைக்கும் படங்களில் மேலும் பல ஆச்சரியங்கள் வெளிப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.