”மாற்றத்திற்கான முதல் விதை” - சவுதியில் இனி பெண்களும் ஓட்டுப் போடலாம்!
ரியாத்: மிகவும் கட்டுப்பெட்டியான நாடு என்று கூறப்படும் சவுதியில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக, நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள சவுதியின் மூன்றாவது நகராட்சி தேர்தலில் முதல் முறையாக பெண்களும் பங்களிக்க உள்ளனர். இதற்காக மெக்கா மற்றும் மெதினாவில் பெண் வாக்காளர் விவரங்களை பதிவு செய்யும் பணி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நகரங்களில் முதன் முதலாக, பெண் வாக்காளர்களாக சபினாஸ் அபு அல்-ஷாமத் மற்றும் ஜமால் அல்-சாதி ஆகிய இரண்டு பெண்கள் பதிவு செய்து கொண்டனர்.
சவுதி அரேபிய அரசின் இந்த முடிவை பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் மாற்றத்திற்கான முதல் விதை என்று வெகுவாக பாராட்டியுள்ளனர்.
சவுதியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதை எதிர்த்து சமீப காலமாக பெண்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.