ஆண்-பெண் ஜோடிகளுக்கு இனி சிக்கல் இல்லை.. ஹோட்டலில் தங்கும் விதிமுறைகளை தளர்த்தியது சவுதி
Recommended Video
சவுதி: சவுதி அரேபியா ஹோட்டல்களில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் உறவுமுறைகளை தெரிவிக்காமல் அறை எடுத்து தங்கி கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து பிற நாடுகள் வாங்கக்கூடிய கச்சா எண்ணெய்க்கான தேவை 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு வெகுவாக குறையத் தொடங்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கக்கூடிய வருவாய், சவுதி அரேபியாவுக்கு குறைய தொடங்கும் என்று தெரிகிறது.
இதையடுத்து சுற்றுலா துறை மூலமும் வருவாய் ஈட்டுவதற்கு முடிவுசெய்து முதல்முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவதற்கு முடிவு செய்து அதை அமல்படுத்தி வருகிறது சவுதி அரசு.
சுற்றுலா பயணிகளுக்கு விசா தந்தால் மட்டும் போதாது.. அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை மனதில் கொண்டு உள்ள அந்த நாட்டு அரசு, சில சலுகைகளை அறிவித்து வருகிறது.
சவுதி அரேபியா கட்டுப்பாடுகள் மிகுந்த நாடு என்பதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதும், சலுகைகளுக்கு ஒரு முக்கிய காரணம்.
வெளிநாட்டு பெண்கள் உடல் முழுக்க கூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது என்றும், நாகரிகமான வகையில் ஆடை அணிந்தால் போதும் என்றும் சவுதி அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தங்களது நாட்டில் உள்ள ஓட்டல்களில் தங்குவோர் ஜோடியாக இருப்பினும், உறவுமுறைகளை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை என்று இப்போது, அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சவுதி மக்கள் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும்போது, தங்களது குடும்ப அடையாளத்தை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். இந்த கட்டுப்பாடு என்பது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கிடையாது. அதேபோல ஆண் துணை இல்லாமல் சவுதி பெண்கள் தனியாகவும் ஹோட்டல் அறையை புக் செய்ய அனுமதி வழங்கியுள்ளது அந்த நாட்டு அரசு.