மீண்டும் ஒரு மைல்கல்! சவுதியில் கால்பந்துபோட்டிகளை காண பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி!
சவுதி அரேபியாவில் கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
ரியாத்: சவுதி அரேபியாவில் கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கார் ஓட்ட அனுமதி
அண்மையில்தான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதுவரை கார் ஓட்டும் பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
விளையாட்டுகளுக்கு தடை
விளையாடுவதற்கு கூட சவுதியில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில விளையாட்டுகளை விளையாட அந்நாட்டு பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வைரலான போட்டோ
மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளும் உண்டு. நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் சவுதி நாட்டு உடையுடன் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியில் பங்கேற்ற போட்டோ வைரலானது நினைவிருக்கலாம்.
கால்பந்து போட்டிகளை காண
இதேபோல் விளையாட்டுப் போட்டிகளை காணவும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கால்பந்து போட்டிகளை காண சவுதி பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
நீக்கப்படும் கண்டிஷன்ஸ்
இந்நிலையில் முதன்முறையாக கால்பந்து போட்டியினை பார்வையிட சவுதியில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மன்னர் சல்மானின் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு அனுமதி
அந்த வகையில் சவுதி அரேபியாவில் பெண்கள் கால்பந்து போட்டியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜெட்டாவில் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தனி கேலரிகளும் உண்டு
எனினும் குடும்பத்தினருடன் சேர்ந்து அமரும் பிரிவில் தான் அவர்கள் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் பெண்களுக்கு என தனி கேலரிகளும், தனியாக கார் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெண் காவலர்கள் பாதுகாப்பு
போட்டிகளை காண வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரஞ்சு நிற கோட் வழங்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் வரவேற்பு
மேலும் போட்டிகளை காணவரும் பெண்களை வரவேற்கும் வகையில் பச்சை நிற ரோப்கள் அணிவிக்கப்பட்டது. சவுதியில் கால்பந்து போட்டியை காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.