சவுதி இளவரசரின் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.. பெண்கள் கொண்டாட்டம்
சவுதி: பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை சவுதி அரசு அதிரடியாக நீக்கியுள்ளது.
சவூதி அரேபியா தனது பெண் குடிமக்களுக்கு உரிமை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக நீண்ட காலமாக விமர்சனங்கள் உண்டு. சவுதி பெண்கள் வெளிநாட்டில் தஞ்சம் கோரும் பல சம்பவங்களை இதற்கு முன்பு பல முறை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், மகுட இளவரசர் முகமது பின் சல்மான், பழமைவாதங்களை புறம்தள்ள முடிவு செய்து பல முன்னுதாரண அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இளவரசர் அதிரடி
இதன் ஒரு பகுதியாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது உள்ளிட்ட பல தடைகளை தளர்த்த முயன்றார் அவர். சவுதியின் ஆண் பாதுகாவலர், கணவர், தந்தை மற்றும் பிற ஆண் உறவினர்களுக்குதான் பெண்களைப் பற்றி முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு உரிமை
பாஸ்போர்ட்டைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ மற்றும் நாட்டிலிருந்து வெளியேறவோ ஆண் உறவினர்களின் அனுமதியைப் பெற வேண்டிய நிலையில் பெண்கள் இருந்தார்கள். ஆனால் 21 வயது நிரம்பிய பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை சவுதி அரசு அதிரடியாக இன்று நீக்கியுள்ளது.
பதிவு செய்யும் உரிமை
குழந்தைகளின் பிறப்புகளையும், திருமணங்களையும் விவாகரத்துகளையும் பதிவு செய்யவும் பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் பாலினம், இயலாமை அல்லது வயது அடிப்படையில் எந்த பாகுபாட்டையும் எதிர்கொள்ளாமல் பணியிடங்களில் பணியாற்ற உரிமை உண்டு என்றும் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
|
தூக்கம் வரவில்லை
பல சவுதி பெண்கள் இந்த உத்தரவை ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். பெண் பிரபலம் முனா அபுசுலேமான் ட்வீட்டில் கூறியுள்ளதை பாருங்கள்: "நான் நியூயார்க்கில் உள்ளேன். அதிகாலை 1 மணியானாலும் தூக்கம் வரவில்லை. சவுதியில் இப்போது ஒரு தலைமுறை முற்றிலும் சுதந்திரமாகவும், தங்கள் சகோதரர்களுக்கு சமமாகவும் வளர்ந்து வருகிறது" என்று கூறியுள்ளார் அவர்.