மீண்டும் மிரட்டும் கொரோனா.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அதிரடி.. ஏன் முக்கியம்
ரியாத்: கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சவுதி அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் இந்த கொரோனா உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல்
கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்த போதிலும், இன்னும் கூட உலகின் பெரும்பாலான நாடுகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
கொரோனா வைரஸ்
கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிக்கொண்டன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தன. கொரோனா குறைந்த பின்னரே, இந்தப் பயணத் தடைகள் மெல்ல நீக்கப்பட்டன. இந்தச் சூழலில் கொரோனா அதிகரிப்பதாக மீண்டும் சவுதி பயண தடையை அறிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகள்
கடந்த சில வாரங்களாகத் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சவுதி அரேபியா தனது குடிமக்களை இந்தியா உட்பட 16 நாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது. இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ், வெனிசுலா நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மங்கி பாக்ஸ்
கொரோனா மட்டுமின்றி மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மையும் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. இது குறித்தும் சவுதி அரசு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பைக் கண்காணிக்கவும் கண்டறியவும், புதிதாக ஏதேனும் தொற்று ஏற்பட்டால் வைரசை எதிர்த்துப் போராடவும் சவுதி அரசுக்குத் திறன் உள்ளது என்று அந்நாட்டின் சுகாதார துணை அமைச்சர் அப்துல்லா ஆசிரி தெரிவித்தார்.
பாதிப்பு இல்லை
இது குறித்து அப்துல்லா ஆசிரி மேலும் கூறுகையில், "இப்போது வரை, இந்த குரங்கு அம்மை மனிதர்களிடையே மிக மிக மெதுவாகத் தான் பரவுகிறது. எனவே, இதுவரை இந்த அம்மை கண்டறியப்பட்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும், இது அதிக நபர்களுக்குப் பரவும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்படியே சவுதி அரேபியாவில் இந்த வைரஸ் பரவினாலும் அதைத் தடுக்கும் ஆற்றல் அரசுக்கு உள்ளது" என்றார்.
உலக சுகாதார அமைப்பு
இதுவரை சுமார் 12 நாடுகளில் 80க்கும் மேற்பட்ட நபர்களுக்குக் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் பரவும் முறை, அறிகுறிகள் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடுதல் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சில குறிப்பிட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. சில நாடுகளில் கடந்த காலங்களிலும் இது அவ்வப்போது மனிதர்களுக்குப் பரவியுள்ளது என்றார்.