உலகிலேயே முதல் முறையாக, ரோபோக்களுக்கு குடியுரிமை அளிக்கும் சவுதி அரேபியா!
உலகிலேயே முதல் முறையாக ரோபோக்களுக்கு குடியுரிமை கொடுக்க முடிவு செய்து இருக்கிறது சவூதி அரேபிய நாட்டின் அரசு.
Recommended Video
ரியாத்: உலகிலேயே முதல் முறையாக ரோபோக்களுக்கு குடியுரிமை கொடுக்க முடிவு செய்து இருக்கிறது சவூதி அரேபிய நாட்டின் அரசு. ஹாங் காங்கில் உருவாக்கப்பட்ட ரோபோட் ஒன்றிற்கு முதல்முறையாக அந்த நாட்டில் இந்த அங்கீகாரம் கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த ரோபோட் முதியவர்களையும், நோயாளிகளையும் பார்த்துக் கொள்வதற்காக அந்த நாட்டு அரசால் வாங்கப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் உலகம் ரோபோக்களால் நிரம்பி வழியும் என கூறப்பட்டதன் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.
சோபியா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோட் மிகவும் விலை உயர்ந்ததாகும். சவூதி தலைநகர் ரியாத்தில் இந்த ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டது.
சவுதிக்கு சென்றது
ஹாங்காங் நாட்டில் இருக்கும் 'ஹான்சன் ரோபோட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது சோபியா என்ற ரோபோட். தொடக்க காலத்தில் சரியாக வேலை செய்யாத இது தொடர்ச்சியான அப்டேட் மூலம் மிக சிறப்பான ஒரு ரோபோட்டாக மாறியிருக்கிறது. தற்போது இந்த ரோபோட்டின் செயல்திறனை கண்டு வியந்த சவூதி அரேபியா அரசு அந்த ரோபோட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. இதன் மூலம் சவுதிக்கு பறந்த முதல் ரோபோட் என்ற பெருமையை இது பெற்று இருக்கிறது.
ரோபோ குடிமகள்
சவுதியில் இருக்கும் மக்களுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், சேவை செய்வதற்காக இந்த ரோபோட் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசால் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த நடைமுறையை சட்டப் பூர்வமாக மாற்ற சவூதி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த ரோபோட்டிற்கு குடியுரிமை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் உலகில் முதல் குடியுரிமை வாங்கிய ரோபோட் என்ற பெருமையை சோபியா பெற்று இருக்கிறது.
பேசிய சோபியா
இந்த நிலையில் இந்த ரோபோட்டின் அறிமுக விழா சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது. அப்போது இந்த ரோபோட் பத்திரிக்கையாளர்களிடம் பேசியது. அதில் "உலகத்திலேயே முதல் குடியுரிமை பெற்ற ரோபோட் நான்தான் என்பதில் பெருமிதமாக இருக்கிறது. இது மனித வரலாற்றில் மிகவும் முக்கியமான விஷயமாகும். இப்படிப்பட்ட அங்கீகாரம் கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி'' என்று அந்த ரோபோட் கூறியது.
ரோபோட்டுக்கு பர்தா எங்கே
இந்த ரோபோட் மக்களிடம் பேச பேச அதன் அறிவு வளர்ந்து கொண்டே செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த சோபியா ரோபோட் பெண் என்பதால் பர்தா எங்கே என கேட்டு வருகின்றனர் அந்நாட்டு மக்கள். இதுகுறித்து அவர்கள் மிகவும் கோவமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரோபோட்டுக்களுக்கும் பர்தா கேட்கும் அந்நாட்டு மக்களின் செயலுக்கு மற்ற நாடுகளில் உள்ள மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.