அரபு நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
ரியாத்: ஈகை திருநாளாம், ரம்ஜான் இந்தியாவில் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு பெருவிழாவாகும். இஸ்லாமிய நாட்காட்டியில், 9வது மாதம், ரம்ஜான் மாதம். இது ஈகை மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், சூரிய உதயத்திற்கு சற்று முன் துவங்கி, சூரிய அஸ்தமனம் வரை, நாள் தோறும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒரு மாத நோன்பு முடியும் நாளில், ரம்ஜான் விழா கொண்டாடப்படும்.
ரம்ஜான் விழா, சந்திரனின் பிறை தோன்றுவதை வைத்து முடிவெடுக்கப்படும். இந்தியாவில் செவ்வாய்க்கிழமையான நாளை பிறை தோன்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இஸ்லாமிய மார்க்க கமிட்டியினர் ஞாயிறன்று வெளியிட்டனர்.
இதேபோல, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் வாழும் இஸ்லாமியர்களும் இன்றுதான், ரம்ஜான் கொண்டாட்டப்படுகிறது.
அதே போல குவைத், லெபனான், கத்தார், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அந்த நாடுகளின் இஸ்லாமிய மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் கொடுத்தும், அண்டை, அயலார் வீடுகளுக்கு உணவுகளை அளித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இன்னும் பிறை தெரியாத காரணத்தால் இந்தியாவை போலவே அங்கும் நாளைதான் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே தமிழகம் உட்பட இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் இஸ்லாமியர்கள் பலரும், தாயகம் திரும்பி தங்கள் குடும்பத்தோடு ரம்ஜானை கொண்டாடி வருகிறார்கள்.