சவுதி அரேபியா உள்ளாட்சி தேர்தல்: முதன்முறையாக 20 பெண்கள் கவுன்சிலர்களாக தேர்வு
ரியாத்: சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 20 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கும்.
இந்தநிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில் இடங்களுக்கு சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. மேலும், 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும். பொதுவாக்கெடுப்புக்கான தொகுதிகளில் 900 பெண்கள் உள்பட 6,440 பேர் போட்டியிட்டனர்.
ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சவுதியின் பல்வேறு பகுதிகளில் போட்டியிட்ட பெண்களில் 20 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.
இவர்களுக்கு சட்டம் இயற்றுவதில் எவ்வித அதிகாரமும் இல்லை என்ற போதிலும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது, உள்ளூர் வரவு செலவு திட்டங்களை மேற்பார்வை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட முடியும். எந்தவொரு ஆண் வாக்காளரையும் பெண் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து ஓட்டு கூட கேட்கமுடியாத சூழலில் 20 பெண்கள் வெற்றி பெற்றுள்ளது வரலாற்று முக்கியதுதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.