சவுதி அரேபியாவில் தியேட்டர்களுக்கு அனுமதி... 2018ல் முதல் தியேட்டர் திறக்கப்படும்!
சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியாத்: சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம் சவுதி நிறைய விஷயங்களில் முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்னும் நிறைய சமுதாய சீர்திருத்தங்கள் சவுதியில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே சவுதியில் 'கோபர்' என்ற இடத்தில் ஒரேயொரு தியேட்டர் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நோ தியேட்டர்
35 வருடங்களுக்கு முன்பு சவுதியில் தியேட்டர்கள் செயல்பட்டு வந்தது. ஆனால் சினிமா பார்ப்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என நிறைய இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்து இருந்தது. இஸ்லாமிய இயக்கங்களின் அழுத்தத்தின் காரணமாக சவுதியில் தியேட்டர்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு இத்தனை நாட்களாக ஒரு தியேட்டர்கள் கூட செயல்படாமல் இருந்தது.
மாற்றங்கள்
இந்த நிலையில் சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார். இந்த விஷயம் உலகம் முழுக்க வைரல் ஆனது. முடி இளவரசர் மிகவும் கராறானவர் என்றும் கூறப்பட்டது.
ஓட்டுநர் உரிமம்
சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதை முடி இளவரசராக பதவியேற்றதும் முகமது பின் சல்மான் நீக்கினார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்டலாம் என்று அவர் அறிவித்தார். அந்த நாட்டில் இது பெண்கள் முன்னேற்றத்தில் பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது. பலரும் அவரின் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
அனுமதி
தற்போது இனி தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி 2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும். எண்ணெய் பொருட்களின் விலை குறைவால் சவுதி அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருளாதார பாதிப்பை போக்கும் வகையில் சவுதியில் இதுபோன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் முடி இளவரசர் கூறியுள்ளார்.