சவுதி அரேபியாவில் இனி 'வாட்' வரி... சொகுசு வாழ்க்கை முடிவிற்கு வருகிறதா?
சவுதி அரேபியாவில் 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு சேவைகளுக்கான வரி வசூலிக்க சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது.
ரியாத்: சவுதி அரேபியாவில் இனி 'வாட்' எனப்படும் மதிப்பு கூட்டு சேவைகளுக்கான வரி வசூலிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வாட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக மற்ற நாடுகள் போல இனி அங்கும் சில பொருட்கள் மீது வரி விதிக்கப்படும். சவுதி வரலாற்றில் முதல்முறையாக இந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் அங்கு இருக்கும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் கஷ்டப்பட நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு காரணமாக ஒரு வருடத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்றும் சவுதி அரசு கணித்துள்ளது.
வாட்
வாட் எனப்படும் மதிப்பு கூட்டு சேவைகளுக்கான வரிவிதிப்பு முறை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ளது. ஆனால் வரி விதிப்பு முறை எதுவும் இல்லாத சவுதியில் முதல் முறையாக இந்த வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வரிவிதிப்பு முறை அறிமுகம் ஆகியுள்ளது. இந்த வருட இறுதியில் மற்ற எண்ணெய் வள நாடுகளிலும் இந்த வரி அறிமுகப்படுத்தப்படும்.
வரி எவ்வளவு
பொருட்களின் மீது 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு 3.3 பில்லியன் டாலர் வருவாய் அந்த நாட்டிற்கு வரும். பெட்ரோல், டீசல், உணவு, உடை, கட்டணம், ஹோட்டல் அறை போன்ற அனைத்திற்கும் வாட் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எதற்காக
இவ்வளவு நாட்களாக இரண்டு நாடுகளும் எண்ணெயில் இருந்து வரும் வருவாயின் மூலம் மட்டுமே சம்பாதித்து கொண்டு இருந்தது. சவுதி தனது 90 சதவிகித வருவாயை எண்ணெய் மூலம் சம்பாதித்தது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் 80 சதவிகித வருவாய் சம்பாதித்தது. ஆனால் எண்ணெய் விலை குறைந்த காரணத்தால் இழப்பை ஈடுகட்டும் வகையில் மக்கள் மீது வரிவிதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
ஆனாலும் வருமான வரி விதிக்கப்படவில்லை. அதேபோல் வாட் வரியில் இருந்து பெரும்பாலான பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், போக்குவரத்து, வங்கிகள் போன்ற பயன்பாடுகளுக்கு வாட் வரி கிடையாது என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த வரிவிதிப்பால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.