தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றுவதில் செஞ்சுரி அடித்தது சவுதி ! இது 6 மாதத்தில் !!
ரியாத் : இந்த ஆண்டில் நூறாவது நபரின் தலையை துண்டித்து சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிரியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரன் மற்றும் சவுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த நபர் ஆகியோரின் தலையை துண்டித்ததன் மூலம் கடந்த ஆறே மாதங்களில் நூறு பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சவுதி அரசுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியா நாட்டில் மத விரோதம், கொலை, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், சவுதிக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் சிரியாவை சேர்ந்த இஸ்மாயில் அல் தவ்ம் மற்றும் சவுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த ராமி அல் கால்டி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இருவருக்கும் சவுதியில் நேற்று (திங்கட்கிழமை) தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த சாதனையை இந்த ஆண்டு அதே சவுதி மிஞ்சி விடும் என சர்வதேச சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.